திருமாவளவன் மீது வரம்பு மீறிய விமர்சனத்திற்கு மஜக கண்டனம்!

image

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..)

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பாஜகவுக்கு எதிராக அரசியல் ரீதியான விமர்சனங்களை முன் வைத்ததற்கு உரிய வகையில் பதில் அளிக்காமல், அவரை கட்டப்பஞ்சாயத்துக்கார் என பாஜக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் கூறியிருப்பதும், பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா அவர்கள், விடுதலை சிறுத்தைகளை அரசியல் களத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று கூறியிருப்பதும் வண்மையாக கண்டிக்கத்தக்கது.

அரசியல் விமர்சனங்களுக்கு, அரசியல் ரீதியாக பதில் அளிப்பதுதான் நாகரீகமாகும். அதுவே விவேகமான அரசியலும் கூட,

தமிழிசை அவர்கள் மீது சிலர் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து விமர்சனங்களை முன் வைப்பதை நாங்கள் ஏற்பதில்லை.

அதுபோலதான், தொல்.திருமாவளவன் அவர்களை தரம் தாழ்ந்து அவர்கள் விமர்சிருத்திருப்பதையும் ஏற்க முடியாது.

அயோத்தி தாசர் பண்டிதர், தாத்தா ரெட்டைமலை சீனிவாசனார் ஆகியோரின் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் பணியாற்றி வருகிறார்.

தலித் வட்டத்தை தாண்டி தமிழர் தேசியம், தமிழ் மொழி பண்பாடு, திராவிட இயக்க நலன், சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு ஆகிய களங்களில் அவர் ஆற்றி வரும் பணிகள் அனைவராலும் வரவேற்கப்படுகிறது.

அவர் ஃபாஸிஸத்தை வழிநடத்தவில்லை, இன அழிப்பை அங்கீகரிப்பதில்லை, ஒற்றைக் கலாச்சார திணிப்பை ஏற்பதில்லை, அவரது கட்சி இனப்படுகொலைகளை தலைமையேற்று நடத்துவதில்லை. இதையெல்லாம் இந்த நாட்டில் யார் செய்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவர்.

எனவே, அவர் மீது பாஜக தலைவர்கள் முன் வைத்த விமர்சனத்தை திரும்ப பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

ஓவ்வொருவரும், பிற தலைவர்களின் மீது இவ்வாறு புழுதிவாரி தூற்ற தொடங்கினால், ஏற்கனவே பாழாய் போயிருக்கும் அரசியல் மேலும் மோசமான நிலையை அடையும் என்பதை அனைவரும் உணர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
M.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
25.10.2017