தமிழக முதல்வருக்கு தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் கூட்டாக நினைவூட்டல் கடிதம்!

ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்க!

பேரறிவாளனுக்கு பரோல் வழங்குக!

தமிழக முதல்வருக்கு தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் கூட்டாக நினைவூட்டல் கடிதம்!

தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA , மஜக பொதுச்செயலாளர் M. தமிமும் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் தமிழக முதல்வருக்கு கூட்டாக கையெழுத்திட்டு இன்று (10.08.17) கடிதம் எழுதியுள்ளனர். இன்று தலைமை செயலகத்தில் ஒப்படைக்கப்பட்ட அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது….

நீண்ட காலமாக சிறையில் வாடும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கக் கோரியும், ஐயா MGR அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகளை கடந்து சிறையில் வாடும், பல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை முன்விடுதலை செய்வது குறித்து நாங்கள்  சட்டமன்றத்தில் பேசியுள்ளோம்.

தங்களிடம் நேரிலும் விரிவாக வலியுறுத்தி பேசியுள்ளோம். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்றத்தில் தாங்கள் பதிலளித்தது எங்களுக்கு ஆறுதலாக இருந்தது.

இவ்விஷயத்தில் கால தாமதம் செய்யாமல் வாய்ப்பிருந்தால்; ஆகஸ்ட் 15 அன்று 71 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு உரிய அறிவிப்புகளை இது குறித்து வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இதில் மனிதநேயத்தோடு தாங்கள் எடுக்கும் முயற்சிகளை வருங்காலமும் வரலாறும் பாராட்டும் என்பதில் ஐயமில்லை. இவ்விஷயத்தில் மிகுந்த நம்பிக்கையோடு தமிழ்நாட்டு மக்கள் காத்திருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி

இவ்வாறு அக்கடிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

தகவல்;
சட்டமன்ற செய்தியாளர்கள் குழு
சென்னை