அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல்…! மஜக கடும் கண்டனம்..!!

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை)

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர். இந்த கோழைத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரின் துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம்.

காஷ்மீரில் நடைபெறும் மண்ணுரிமைக்கான அரசியல் போராட்டம் இது போன்ற பயங்கரவாத செயல்களால் திசைமாற்றப்படுவது வேதனையளிக்கிறது.

இதனை பெரும்பாலான காஷ்மீர் மக்கள் விரும்பாத போதும், பயங்கரவதிகளால் அவர்களின் பாரம்பரிய பெருமையும் , சமூக ஒற்றுமையும் சீர்குலைய அவர்கள் அனுமதிக்க கூடாது. அனுமதிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்நிலையில் அச்சம்பவத்தில் இதர பக்தர்களை தனது சாமர்த்தியமான திறமையால் பாதுகாத்த பேருந்து ஓட்டுநர் சலீம் அவர்களை மனதார பாராட்டுகிறோம். அவர் இந்திய ஒருமைப்பாட்டின் அடையாளங்களை பேணிப் பாதுகாத்திருக்கிறார்.

இது போன்ற துயர சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து தரப்பும் இணைந்து செயலாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்;
M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
12.07.2017