கலைஞரின் பணிகளை மனதார பாராட்டுகிறோம்…

image

மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அறிக்கை:

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தி.மு.க.வின் தலைவருமான திரு. கலைஞர் அவர்களின் சட்டப்பேரவை வைர விழா நிகழ்ச்சி இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

கலை, இலக்கியம், தமிழ்த் தொண்டு, சமுதாயப்பணிகள், இவற்றோடு அரசியலை முன்னிறுத்தி அவர் ஆற்றிய சேவைகள் பிரமிப்பானவை.

சட்டப்பேரவையில் அவர் எடுத்து வைத்த வாதங்கள் கூர்மையான ஆயுதங்களாக பாய்ந்தன. அபாரமான நினைவாற்றல் அவரது ஆளுமையை அலங்கரித்தது. நகைச்சுவை ததும்ப அவர் எடுத்துரைத்த கருத்துக்களும், புள்ளி விபரங்களும் நாட்டு மக்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது.

இந்தியாவின் மூத்த தலைவர்களில் ஒருவராக போற்றப்படும் திரு. கலைஞர் அவர்களின் சட்டப்பேரவை செயல்பாடுகள் வரலாற்றின் பக்கங்களின் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

மிக மிக எளிய குடும்பத்து பின்னனியில் இருந்து உருவாகி, சீர்திருத்த பாதையில் பயணித்து, தமிழக அரசியலையும் தாண்டி தேசிய அரசியலையும் தீர்மானித்த அவரது அறிவும் ஆளுமையும் பலருக்கும் அரசியல் பாடமாக இருக்கிறது.

மனிநேய ஜனநாயக கட்சி அரசியல் ரீதியாக மாற்று முகாமில் பணியாற்றினாலும் , திரு.கலைஞர் அவர்கள் மீது மிகுந்த மரியாதையைக் கொண்டிருக்கிறது. அவர் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என வாழ்த்துகிறோம்.

அவரது சட்டசபை பணிகளை மனதார பாராட்டி மகிழ்கின்றோம்.

இவண்,

M.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
O3.06.2017