நூல் விமர்சனம்! “உருவாகாத இந்திய தேசியமும் , உருவான இந்து பாசிசமும்”

image

ஐயா. பழ.நெடுமாறன் எழுதிய படிக்க வேண்டிய நூல்!

“உருவாகாத இந்திய தேசியமும் , உருவான இந்து பாசிசமும்”

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதளப் பதிவு)

நூல்கள் தான் அறிவின் வாசலை திறக்கின்றன. மனதை கீறி விதைபோடுகின்றன. இறுக்கமான போக்குகளை கட்டுடைத்து பரந்து விரிந்து மனிதனை சிந்திக்க வைக்கின்றன. மிக முக்கியமாக மனிதனை பக்குவப்படுத்துகின்றன. அவனது மூடத்தனங்களை உடைத்து சிந்தனையை தூண்டுகின்றன.

அப்படிப்பட்ட ஒரு அறிய வரலாற்று ஆய்வு நூலை, மக்கள் மொழியில் எழுதியிருக்கிறார் தமிழ் தேசிய போராளி ஐயா.பா.நெடுமாறன் !!

தமிழுக்காகவே சிந்திப்பது, தமிழ்நாட்டின் வளங்களை காப்பதற்காகவே போராடுவது என்பதை வாழ்வியலாக கொண்டவர். காமராஜின் அருமை தொண்டர் ஐயா. நல்லக்கண்ணுவை ஒரு நாணயத்தின் ஒழுக்கம் என்றால் இவர் அந்த நாணயத்தின் இன்னொரு பக்கமாகும்.

“பொடா” சட்டத்தின் கீழ் அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருத்தப்போது தனது சக கைதிகளின் ஒத்துழைப்போடு அவர் எழுதியது தான் “உருவாகாத இந்தியா தேசியமும், உருவான இந்து பாசிசமும்” என்ற நூலாகும்..

காவி குழுக்கள் ஹிட்லரையும், முசோலினியையும் எவ்வாறு தங்களுது வழிகாட்டிகளாக கருதுகிறார்கள் என்பதையும், திலகரின் மதவெறியையும், அதை வ.வு.சிதம்பரனார் , பாரதியார் போன்றோர் ஏற்காததையும் . முன்பு பசு மாட்டுக்கறியை பிராமணர்கள் எவ்வாறு ருசியாக உண்டார்கள் என்பது குறித்தும், பிராமணனர்கள் கெளதமபுத்தரை கடுமையயாக எதிர்த்து வரலாறு குறித்தும் ஆதாரமாக குறிப்புகளுடன் இந்நூல் பேசுகிறது.

பாரதப் பண்பாடு என்ற பெயரில் மொழி வழி தேசியத்தை எதிர்க்கும் சூழ்ச்சிகள்,  உள்ளிட்ட அதிகார அடுக்களில் ஊடுருவல் என பல அபாயகரமான காவி செயல் திட்டங்களை இந்நூலில் விவரிக்கிறது.

முக்கியமாக அத்வானியை ஏன் பாஜக ஓரம் கட்டியது என்று குறித்து பக்கம் 447 முதல் 451 வரை மிக அழகாக கூறப்பட்டிருக்கிறது.

வேத கால செய்திகள் தொடங்கி இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு வைத்த வேட்டுகள் வரை பல அறிய ஆபத்தான, அபாயகரனமாக திட்டங்களை இந்நூலில் படிக்கும் போது’ கவலைகள் மேலிடுகின்றன.

அமைதியையும், சமூக ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் நேசிப்பவர்கள் இந்நூலை படிப்பதோடு நில்லாமல் அடுத்தவருக்கு அன்பளிப்பு கொடுக்க வேண்டும்.

குறிப்பாக காவி மதவெறி சக்திகளால் தூண்டப்பட்ட அப்பாவி சகோதர்களுக்கு இந்நூலை வாசிக்க கொடுக்க வேண்டும். இதன் மூலம் தீயவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து, சமூக ஒற்றுமையை கட்டிக்காக்கும் பணியில் நம்மை ஈடுபடுத்திக்கொண்ட மன நிறைவை பெறலாம்.

புத்தக கடைகளில் இந்நூலை இடம் பெற செய்திட புத்தக கடை உரிமையாளர்களும் முன் முயற்சி செய்திடல் வேண்டும்..

நூல் பெற தொடர்புக்கு :

தமிழ்க்குலம் பதிப்பகம்
119/A, டிப்போலைன்,
தேசிய நெடுஞ்சாலை
சி.பல்லாவரம்,
சென்னை – 600 043
தொலை நகலி : 2264 0421