மாடு விற்பனை குறித்த தீர்மானம்.! அதிர்ந்தது சட்டமன்றம்..! மஜக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!

சென்னை.ஜூன்.20., கடந்த 23.05.2017 அன்று மாடு விற்பனை குறித்தும், இறைச்சிக்காக பசு, ஒட்டகங்கள், எருது, காளை உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டுவது குறித்தும் வெளியிட்ட அறிவிப்புகள் நாடெங்கும் கொந்தளிப்புகளை உருவாக்கியது.

இதுகுறித்து மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடமும் விரிவாக பேசி ஆதரவு திரட்டி வந்தார். அவரும் கடந்த 12.06.2017 அன்று சட்டமன்றத்தில் தனிநபர் தீர்மானம் நிறைவேற்ற கோரி சட்டமன்றத்தில் மனு கொடுத்திருந்தார்.

இன்று சட்டமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் திரு. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி தலைவர். K.R.ராமசாமி, மஜக சார்பில் M. தமிமுன் அன்சாரி, தமிழக கொங்கு இளைஞர் பேரவை சார்பில் உ.தனியரசு, முஸ்லீம் லீக் சார்பில் அபூபக்கர் இப்பிரச்சனையை எழுப்பினர். கருணாஸ் பேச எழுந்த போது அவர் முன்கூட்டியே கடிதம் தராததால் அனுமதி மறுக்கப்பட்டது.

இதற்க்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி அவர்கள், இது குறித்து வழக்கு நடைபெறுவதால், இம்மாதம் நீதி மன்றத்திற்கு அந்த வழக்கு வருவதாலும் அதன் பிறகு இந்த அரசு, பெரும்பான்மையான மக்களின் முடிவுகளை ஏற்று நடவடிக்கை எடுக்கும் என்றார்.

தீர்மானம் நிறைவேற்றாவிட்டாலும், குறைந்தபட்சம் இதை கோவா போல எதிர்க்கவாவது வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. அதை ஆதரித்து அதிமுக தோழமை கட்சிகளான மஜக, தமிழக கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதனை தொடர்ந்து சட்டமன்ற வளாகத்தில் M. தமிமுன் அன்சாரி அவர்கள் பேனரை தூக்கிய போது அதற்க்கு ஆதரவாக காங்கிரஸ், முஸ்லீம் லீக், முக்குலத்தோர் புலிப்படை, தமிழக கொங்கு இளைஞர் பேரவை உறுப்பினர்கள் கைக் கோர்த்தனர்.

தகவல்;

தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
சென்னை.
#MJK_IT_WING
20.06.2017