விஜய் மல்லையாவுக்கு ஒரு நீதி ? விவசாயிகளுக்கு ஒரு நீதியா ? பட்டமளிப்பு விழாவில் M.தமிமுன் அன்சாரி MLA உரை !

image

image

விஜய் மல்லையாவுக்கு ஒரு நீதி ? விவசாயிகளுக்கு ஒரு நீதியா ? மாணவர்கள் சிந்திக்க வேண்டும் ! பட்டமளிப்பு விழாவில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA உரை !

நாகப்பட்டினத்தில் புகழ்பெற்ற EGS பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த ஏப்ரல் 30 அன்று  18வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கலந்துகொண்டார் . தொடர்ந்து 2 மணி நேரம் நின்றுகொண்டே 598 மாணவ, மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்கினார்.

மருத்துவ ஓய்வு காரணமாக ஒருமாதம் வரை நிகழ்ச்சிகளை ரத்து செய்திருந்த நிலையில், கல்லூரி நிர்வாகத்தின் அன்பு வேண்டுகோளை ஏற்று, நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

அவரது குரல் பலவீனமான இருந்தாலும், கருத்துகள் வீரியத்தோடு வெளிப்பட்டு, பலத்த கரகோஷங்களை பெற்ற வண்ணம் இருந்தது.அவரை பின்னணி இசையுடன் இளைஞர்களின் எழுச்சி நாயகன் என்று முன்னுரை கொடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளர் அழைத்தபோது மாணவர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர் .

தனது உரையில் , கல்லூரி வாழ்க்கையை வசந்த காலம் என்று வர்ணித்தவர், கல்லூரி முடித்த பிறகு அந்த நாட்களை நினைத்தால் கண்ணீர் முட்டும் என்றார். வகுப்பறை அரட்டைகள், கரும்பலகை குறிப்புகள், நண்பர்களுடன் போட்ட அன்பு சண்டைகள், கடைசி தேர்வு, நிறைவு நாளன்று ஆட்டோகிராப் வாங்கியது, திடீர் காதல் என ஒவ்வொன்றையும் நினைத்தாலே இனிக்கும் நாட்கள் அவை என்றார். அப்போது அரங்கமே நெகிழ்வானது.

பிறகு மாணவ, மாணவிகளின் எதிர்காலம் குறித்தும், தன்னம்பிக்கையுடன் அவற்றை எதிர்கொள்வது குறித்தும் பேசினார். போட்டிகளும், பொறாமைகளும் நிறைந்த உலகை துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்ட் கம்பெனியை, அதன் நிறுவனர் ஹென்றி ஃபோர்ட் தொடங்கிய போது நெருக்கடிகளை எதிர்கொண்டார். பிறகு அந்த தொழிற்சாலை மூடப்பட்டது. அவர் தன்னம்பிக்கையுடன் போராடி மீண்டும் தொழிற்சாலையை திறந்தார். இன்று உலகம் முழுக்க சாலைகளில் அவரது ஃபோர்ட் கார்கள் தான் ஓடுகிறது என்பதை உதாரணமாக கூறினார்.

அதுபோல நாம் கற்ற கல்வி பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே இருக்கக் கூடாது. அது நமக்கும், நம்மை சுற்றி வாழும் சமூகத்திற்கும், நாட்டுக்கும் சேவை செய்வதாக இருக்க வேண்டும் என்றார் .

அது போல் இளைய தலைமுறையினர் ஏற்றத் தாழ்வுக்கு எதிராக போராட வேண்டும் என்றார் . நமது நாட்டின் வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளை கடன் வாங்கிய விஜய் மல்லையா, கடனை செலுத்தாமல் லண்டனில் தப்பித்து வாழ்கிறார். அவரை நமது அரசால் தண்டிக்க முடியவில்லை.

நமது தந்தையும், பாட்டனும், பூட்டனும் விவசாயி. நாம் ,  நிலத்தில் விதை தெளித்து, உரமிட்டு , மழை இல்லாததால் நஷ்டமடைகிறோம். நமது விவசாயிகள் நஷ்டம் காரணமாக வங்கிகளில் வாங்கிய கடனை ரத்து செய்யுங்கள் என போராடினால் நீதி கிடைப்பதில்லை.

இப்படி நடப்பது  ஏன் ? என்று நாம் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம். நமது கல்வி அந்த சிந்தனையை தூண்ட வேண்டும்.

மனிதநேயம் தான்  நமது வாழ்க்கையின் அடிப்படையாக இருக்க வேண்டும் . நான் அக்னி ஏவுகணைக்காக அப்துல் கலாமை பாராட்டுவதில்லை . அவர் ஊனமுற்ற குழந்தைகளுக்காக எடை குறைந்த விலை மலிவான செயற்கை கால்களை உருவாக்கியதற்காக பாராட்டுகிறேன் . எனவே நீங்கள் மனிதநேயத்தோடு எதையும் அணுக வேண்டும் .

பின் தங்கிய மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, உலகெங்கும் விடுதலைக்கு போராடும் இனங்களுக்காக பாடுபட வேண்டும். சமூக இணைய தளங்களின் வழியாகவும் குரல் கொடுக்க வேண்டும்.

பிறர் நலம் நாடும் வகையில் உங்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.

அவர் பேசி முடித்ததும் மாணவ, மாணவிகள் பலத்த கரவொலி எழுப்பினர். பிறகு நிகழ்ச்சி முடிந்ததும் திரளான மாணவர்களும், மாணவிகளும், பேராசிரியர்களும், பத்திரிக்கையாளர்களும் MLA அவர்களை தனியாக சந்தித்து உடல் நலம் விசாரித்து, ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தினர்.

கட்சியினரின் அறிவுறுத்தலையும் மீறி இந்நிகழ்ச்சியில் நட்பு அடிப்படையில் பங்கேற்றதாகவும் , வேறு நிகழ்ச்சிகளை தற்போது ரத்து செய்து விட்டதாகவும் கூறினார் .

தகவல்:

மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK – IT WING)
நாகை தெற்கு மாவட்டம்