இரண்டாம் ஆண்டில் மஜக ! ஜனநாயக களத்தில் தொடர்ந்து வாகை சூடுவோம்

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் வாழ்த்துச் செய்தி)

    மனிதநேய ஜனநாயக கட்சி (பிப்ரவரி 28) ஓராண்டை பூர்த்தி செய்து இரண்டாம் ஆண்டில் பயணத்தை தொடங்குகிறது .

கூட்டிலிருந்து பரக்க பரக்க தூக்கியெறியப்பட்ட சிறகு முளைக்காத குஞ்சுகளாய் ; திசை தெரியாமல் தவித்தப்போது ; இந்த நாளில்தான் நமக்கென ஒரு கூட்டை கட்டினோம் .

கொட்டிய கண்ணீரை கைகளில் ஏந்தி ; வீசிய நெருப்பு கங்குகளை செம்மலர்களாக பாவித்து ; நாம் நடத்திய துணிச்சல்மிகு பயணம் ; இன்று , தமிழகத்தில் தவிர்க்கமுடியாத அரசியல் சக்தியாக நம்மை வளர்த்துக் கொண்டிருக்கிறது .

புதிய பாதை … புதிய பயணம் … என புறப்பட்டோம் . அய்யம்பேட்டையில் கொடி தூக்கி ; இறையருளால் செயின் ஜார்ஜ் கோட்டைக்குள் நுழைந்தோம் . இந்த ஓராண்டுகாலத்தில் நெருப்பாற்றில் எதிர்நீச்சல் அடித்து முன்னேறியிருக்கிறோம் .

இத் தருணத்தில் , நாங்கள் கிணற்றுக்குள் தூக்கியெறியப்பட்ட கூலாங்கற்கள் அல்ல ; கடப்பாறையால் பெயர்க்க முடியாத பெருமலை என்பதை செயல்பாடுகளால் நிரூபித்திருக்கிறோம் .

சிவந்த விழிகளில் லட்சியம் சுமக்கும் மாணவர்களும் , அறத்துக்காக எதையும் எதிர்க்கும் இளைஞர்களும் மனிதநேய ஜனநாயக கட்சியின் அறிவாயுதங்களாக திகழ்கிறார்கள் .

ஈரமும் , வீரமும் மிக்க இப்படையில் பெரியவர்களும் , பெண்களும் இணைந்து ஜனநாயக கடமையாற்ற வருகிறார்கள் .

இருண்டு கிடக்கும் தூர வானத்தில் சிரிக்கும் நட்சத்திரமாய் ; மழை நிலத்தில் விழுந்து கிடக்கும் வீரீய விதையாய் , தமிழக அரசியலில் நம்பிக்கையுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் .

வளைவுகள் நிறைந்த அரசியலில் , நேர்மையாகவும் , நெரிசல்மிகு பயணத்தில் அழுக்குப் படாமலும் பயணிக்கிறோம் என்பதில்தான் நமது தனித்தன்மை மிளிர்கிறது .

இலட்சியப் பிடிப்பும் , இளமை துடிப்பும் கொண்ட அறப்போர் வீரர்களோடு , ஜனநாயக களத்தில் தொடர்ந்து வாகை சூட இந்நாளில் உறுதியேற்போம் .!

நாம் கடலில் மிதக்கும் கட்டுமரம் அல்ல ; அலை கடலை கிழித்துச் செல்லும் போர்க்கப்பல் என்பதை நிரூபிப்போம் .

மனிதநேய சொந்தங்கள் அனைவருக்கும் எம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை சமர்பிக்கிறோம் . வாழ்த்துக்கள் … !

இவண் :
M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
27.02.2017