அன்பான நாகை தொகுதி மக்களுக்கு…

image

(M.தமிமுன் அன்சாரி MLA – வின் விளக்கம்)

அன்புக்குரிய நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி சகோதர … , சகோதரிகளே … நீங்கள் நலம்பெற வாழ்த்துக்கள் !

சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து தங்களுடன் கருத்து பரிமாற விரும்புகிறேன் . தங்களின் பேராதரவோடு நான் சட்டமன்ற உறுப்பினராகி, எளிமையான அணுகுமுறைகளோடு , நேர்மையாக பணியாற்றி வருகிறேன் .

எமது தோழமை கட்சியான அதிமுகவில் ஏற்பட்ட சர்ச்சைகளை தொடர்ந்து , யார் முதல்வராக வரவேண்டும் என்ற விவாதம் அரசியலை பரபரப்பாக்கியது. இது குறித்து தொகுதி மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என தினமும் நூற்றுக்கணக்கான அலைப்பேசி அழைப்புகள் வந்தன .

அதனை மதித்து வேறு யாரும் செய்யத் துணியாத அரிய முயற்சியை , என் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனைப்படி முன்னெடுத்தேன் . கருத்துப் பெட்டியை வைத்து கருத்தாய்வை மேற்கொண்டேன் . அனைவருமே பாரட்டினார்கள் .

அங்கு 2 ஆயிரம் படிவங்கள் பூர்த்தியாயின . ஆனால் மக்கள் மேலும் திரண்டார்கள் . திரு . நாகராஜன் என்பவர் தலைமையில் சிலர் வந்து “ OPS – க்கு ஆதரவாக போடுங்க “ என கூச்சல் எழுப்பியதால் பதட்டம் உருவானது . குழப்பமும் உருவானது . அமைதியாக ஜனநாயக வழியில் எடுக்கப்பட்ட முயற்சி , இதனால் பாதியிலேயே முடிந்தது . காவல் துறையின் அறிவுறுத்தலை ஏற்று நாங்கள் கருத்தாய்வை நிறுத்திவிட்டோம் .

அங்கே திரு OPS அவர்களது ஆதரவாளர்கள் ஒரு சார்பாக வாக்களிக்க தூண்டினார்கள் . என்பதாக குற்றச்சாட்டு மறு தரப்பால் எழுந்து , மேலும் 2 ஆயிரம் பேரின் கருத்துகளை மட்டுமே எடுத்துக் கொள்ள கூடாது என பலரும் கூறியதால் , அந்த கருத்தாய்வை நிராகரிக்க வேண்டியதாகிவிட்டது . ஒரு நல்ல முயற்சி , நிராகரிப்புக்கு ஆளானதற்கு சகோதரர் . OPS ஆதரவாளரான நாகராஜன் போன்றோர் செய்த குழப்பம் தான் காரணமாகும் என்பதை பத்திரிக்கையாளர்கள் , உளவுத்துறையினர் உட்பட அனைவரும் அறிவர் .

இந்நிலையில் , யாரை ஆதரிப்பது என எங்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு பலமுறை கூடி விவாதித்தது .

திரு. செங்கோட்டையன் அண்ணன் எங்கள் தலைமையகத்திற்கு வந்தபோது அவர் எங்கள் ஆதரவை கேட்டார் . அப்போது பூரண மதுவிலக்கு மற்றும் ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் முன் விடுதலை ஆகிய இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து , ஏற்கனவே 20 நாட்களுக்கு முன்பாக கொடுக்கப்பட்ட மஜகவின் கோரிக்கைகளையும் நினைவூட்டினோம் .

அதுபோல் , திரு . மதுசூதனன் அண்ணனும் , மா. ஃபா. பாண்டியராஜன் அண்ணனும் வந்தபோது நீங்கள் பாஜக ஆதரவோடு அதிமுகவை பிளவுபடுத்துவதாக குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது . எனவே வகுப்புவாத சக்திகளை வளர விடமாட்டோம் என்று ஒரு அறிக்கையை தாருங்கள் என்றோம் . பிறகு இவர்களின் சார்பில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் அண்ணன் ஜெயபால் அவர்களும் , கமலக்கண்ணன் அவர்களும் மீண்டும் வந்தபோது அவர்களிடமும் இதை வலியுறுத்தினோம் . இதற்கு பதில் இல்லை .

அதன்பிறகு தமிழ் தேசிய தலைவர்களும் , திராவிட இயக்க தலைவர்களும் , சிறுபான்மை இயக்க தலைவர்களும் எங்களிடம் பேசினார்கள் . பா ஜ க வின் சூழ்ச்சியை முறியடிக்க திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஆதரிப்பது தான் நல்லது என்றார்கள் .

எனவே தமிழகத்தின் நலன்கருதி , நாங்கள் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்தோம் .

இடையில் இரு தரப்பையும் ஒன்றிணைக்க சமாதான முயற்சிகளையும் முன்னெடுத்தோம் . இதை ஜூனியர் விகடன் கூட கழுகார் பகுதியில் வெளியிட்டுள்ளது . அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது .

இந்நிலையில் நாகை தொகுதியில் உள்ள அண்ணன் OPS ஆதரவாளர்கள் நீங்கள் ஏன் எடப்பாடிக்கு வாக்களித்தீர்கள் என கேட்கிறார்கள் . அதற்கான விளக்கத்தை மேலே தெளிவாக கூறிவிட்டோம் . அடுத்து அதிமுக வின் 121 MLA க்களும்  ஒரு தெளிவான முடிவுக்கு வந்துவிட்டார்கள் . தங்கள் கட்சியான அதிமுக பிளவுபடக்கூடாது என்றும் , ஆட்சிக் கவிழக் கூடாது என்றும் அவர்கள் முடிவெடுத்துள்ள நிலையில் , தோழமை கட்சியான நாங்கள் அதற்கு ஆதரவளிப்பது தான் கூட்டணி நியாயமாகும் .

எனது ஒரு ஓட்டு இல்லாவிட்டாலும் அவர்கள் ஆட்சி அமைத்துவிடுவார்கள் . இந்நிலையில் தொகுதிக்கு எஞ்சிய 4 ஆண்டு காலத்திற்கு பல நன்மைகளை செய்யும் ஒரு வாய்ப்பையும் , தமிழ் சமுதாயத்திற்காகவும் , சிறுபான்மை சமுதாயத்திற்காகவும் பணியாற்றும் ஒரு வாய்ப்பையும் இழந்து விடக்கூடாது என தமிழ் சான்றோர்களும் , சமுதாயப் பெரியவர்களும் கூறிய அறிவுரைப்படியே நான் முடிவெடுத்தேன் . எங்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவும் அவ்வாறே வழி காட்டியது .

இந்நிலையில் தொகுதியில் உள்ள அண்ணன் OPS ஆதரவாளர்கள் எங்கள் மீது வருத்தப்படுவதில் அர்த்தமில்லை . நாங்கள் இரட்டை இலை சின்னம் உள்ள அதிமுகவுடன் கூட்டணி என்ற அடிப்படையில் பயணிக்கிறோம்.

அண்ணன் OPS அவர்களின் மீதும் , தற்போது நாகை தொகுதியிலிருந்து சென்று அவருடன் இணைந்துள்ள அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் அண்ணன் ஜீவானந்தம் , அண்ணன் ஜெயபால் ஆகியோரின் மீதும் எங்களுக்கு மரியாதை இப்போதும் இருக்கிறது .

ஆனால் எங்களின் யதார்த்த நிலையை புரிந்து கொள்ளாமல் எங்களை கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது .

நான் உறுதியாக நம்பும்,இறைவன் மீது ஆணையாக இவ்விசயத்தில் நேர்மையாகவும் , கண்ணியமாகவும் நானும் என் கட்சியினரும் நடந்துக் கொண்டுள்ளோம் . ஏதோ பணத்திற்கு விலை போனது போல அண்ணன் OPS அவர்களின் ஆதரவாளர்கள் எங்களை விமர்சிப்பது அதிர்ச்சியளிக்கிறது . நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. நாங்கள் இவ்விசயத்தில் எவ்வளவு கண்ணியமாக நடந்துக் கொண்டோம் என்பதை அண்ணன் மா. ஃபா. பாண்டியராஜன் மற்றும் இருதரப்பிலிருந்து வந்து எங்களை தலைமை அலுவலகத்தில் சந்தித்த தலைவர்களிடம் கேட்டுவிட்டு எழுதுங்கள் .

என் அருமைக்குரிய நாகை தொகுதி சகோதர … சகோதரிகளே … உங்களின் நலனுக்காக கீழ்க்கண்ட ஐந்து கோரிக்கைகளை எடப்பாடி. கே. பழனிச்சாமி அண்ணன் தலைமையிலான அதிமுக அரசிடம் வைத்துள்ளேன் .

* நாகை துறைமுகத்தை மேம்படுத்தி செயல்படுத்துவது .

* குடிநீர் பிரச்சினையை தீர்க்க பனங்குடி ஏரியை தூர்வாருவது .

* திருமருகலை தனி தாலுக்கா வாக அறிவிப்பது .

* நாகை தாமரை குளத்தை சீரமைப்பது .

* நாகூர் மீனவர்களின் நலன்காக்க வெட்டாற்றில் தடுப்பு கற்கலை கொட்டுவது .

ஆகிய 5 கோரிக்கைகளை எழுத்து மூலமாக வைத்துள்ளேன் . இதற்காகவும் , மேலும் வெட்டாற்றின் குறுக்கே உத்தம சோழபுரம் அருகே தடுப்பணை கட்டி நதிநீரை சேமிப்பது உள்ளிட்ட கோரிக்கைக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன் என்பதையும் உறுதிப்பட தெரிவித்துக் கொள்கிறேன் .

நன்றி .!

இவண்

உங்கள் ஊழியன்
M.தமிமுன் அன்சாரி
நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர்
19.02.2017