வாழ்க! ஒலிம்பிக் என்னும் உலகத் திருவிழா!

உலக மக்களை ஒன்றுபடுத்தும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பிரேசிலின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான ரியோ_டி_ஜெனிரோ நகரில் நாளை தொடங்குகிறது.

இந்த 31 வது ஒலிம்பிக் போட்டி 17 நாட்கள் நடைபெற உள்ளது. 76 ஆயிரம் கோடி செலவில், 206 நாடுகளைச் சேர்ந்த 11,239 வீரர்களுடன், 33 மைதானங்களில் நடைபெற உள்ளது. 85 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தென் அமெரிக்க கண்டத்தில் நடைபெறும் முதல் ஒலிம்பிக் போட்டி என்பதால் அக்கண்டம் முழுதும் கொண்டாட்டம் நிலவுகிறது. #BRICS கூட்டமைப்பு நாடுகளில் ரஷ்யா, #இந்தியா,சீனா,தென் ஆப்ரிக்கா ஆகிய நான்கு நாடுகளுடன் பிரேசிலும் இருக்கிறது. அந்த வகையில் இந்த ஒலிம்பிக் போட்டி கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

2012 ஆம் ஆண்டில் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி அளவுக்கு ஆடம்பர செலவுகள் இல்லாமல் இன்று நாட்டின் அரசியல்-பொருளாதார நிலைக்கு ஏற்ப பிரேசில் கச்சிதமாக போட்டியை நடத்துவது பாராட்டத்தக்கது. இதில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் இருந்து 118 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த முறை நம்நாடு நிறைய தங்க பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற ஆவல் எல்லோரும் இருக்கிறது.

‘#தங்க_மகன்கள்’ ஜமைக்காவின் உசேன் போல்ட், அமெரிக்காவின் மைக்கல் பெல்ப்ஸ், போன்றவர்கள் இம்முறையும் களம் காண்பது  எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

“#இன்னும்_வேகம், #இன்னும்_உயரம், #இன்னும்_வலிமை” என்பதே ஒலிம்பிக் போட்டியின் முழக்கமாகும்.

வெள்ளையர்கள் – கருப்பர்கள், மேலைநாட்டவர்கள் – கீழைநாட்டவர்கள் ஐரோப்பியர்கள் – ஐரோப்பியர் அல்லாதவர்கள் என்பது போன்ற வேற்றுமைகளை உடைத்து அனைவரையும் கை குலுக்க வைக்கும் ஒற்றுமை திருவிழா என்ற அடிப்படையில்  ஒலிம்பிக் போட்டிகள் உலகை இணைக்கின்றன.

இம்முறை ஆசிய, ஆப்ரிக்க, தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த வீரர் – வீராங்கனைகள் அதிக அளவில் வெற்றிகளை குவிக்க வேண்டும் என விரும்புகிறேன். காரணம் பின்தங்கிய கண்டங்களின் வெற்றியில் தானே உலக முன்னேற்றம் அடங்கியிருக்கிறது!

இவண்
M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி 05/08/2016.