ஜனாதிபதி தேர்தலில் நாட்டு நலனை காக்கும் வகையில் செயல்படுவோம்.

(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன்  அன்சாரி அவர்கள் வெளியிடும் அறிக்கை)

முதல்வர் மாண்புமிகு  எடப்பாடியார் அவர்கள், இஃப்தார் நிகழ்ச்சி நடத்திய இரண்டு மணி நேரத்திற்குள் ‘ஜனாதிபதி தேர்தலில் BJP  வேட்பாளருக்கு ஆதரவு’ என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அதில் பேசிய முதல்வர் எடப்பாடியார் மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதிக்காக பயணிப்போம் என்றும் பேசினார்.

இப்படி பேசிய இரண்டு மணிநேரத்திற்குள் அவர் எடுத்திருக்கும் முடிவு அரசியல் அரங்கில் ஆழமான விவாதங்களையும், விமர்சனங்களையும் உருவாக்கி இருக்கிறது.

இது மறைந்த மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு எதிரானது என்பதில் ஐயமில்லை, இது அதிமுக தொண்டர்களின் மனநிலைக்கும் எதிரானது என்பது தான் உண்மை. இது அதிமுகவின் முடிவா ? எடப்பாடியாரின் முடிவா என்பதை எதிர்காலம் விளக்கும்.

இவ்விஷயத்தில் ஏற்கனவே அறிவித்த முடிவில் மஜக தெளிவாக இருக்கிறது. அடிப்படை கொள்கைகளில் சமரசம் இல்லை. ஜனாதிபதி தேர்தலில் எங்கள் ஆதரவு தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் சமயசார்பற்ற, சமூக நீதியை மதிக்கும் ஒருவருக்கே என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறோம்.

பதவிகளை விட எங்களுக்கு கொள்கைகளே முக்கியம். நாட்டு நலனை காக்க, சமூக நீதி சக்திகளுடன் இணைந்து இவ்விஷயத்தில் செயலாற்றுவோம்.

இவண்.

M. தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
22_06_17