தோழர் செல்வராஜ் MP மரணம் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல்..

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், தற்போதைய நாகை நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர். M.செல்வராஜ் M.P. அவர்கள் மரணித்த செய்தியறிந்து வருந்துகிறோம்.

நாகை நாடாளுமன்ற தொகுதியில் 1989, 1996, 1998, 2019 ஆகிய வருடங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிப்பெற்று, அத் தொகுதியில் அதிக முறை மக்கள் பிரதிநிதியாக இருந்த சிறப்பு அவருக்குண்டு.

விவசாயிகள் உள்ளிட்ட அனைவரின் நலன்களுக்காகவும் குரல் கொடுத்தவர்.

பொதுவுடைமை தோழர்களுக்கே உரிய எளிமையும், இனிமையும் கொண்டவர்.

சமீப மாதங்களாக அவர் உடல் நலம் குன்றியிருந்த நிலையில், இம்முறை தேர்தலில் வேறு ஒருவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாய்ப்பு வழங்கிருந்தது.

தன் சுகவீனத்தையும் பாராது கட்சியின் வெற்றிக்காக உழைத்தார்.

கடந்த ஏப்ரலில் பொதக்குடியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் கடைசியாக சந்தித்தேன்.

அப்போது நாகை நாடாளுமன்ற தொகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியினரின் களப்பணிகள் குறித்து உற்சாகமாக பேசினார்.

ஒரே சமயத்தில் நாகையில் நான் சட்டமன்ற உறுப்பினராகவும், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த போது இருவரும் இணைந்து பங்கேற்ற நிகழ்ச்சிகள் ஏராளம்.

குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகளில் தவறாது பங்கேற்பதும், கூட்டணி – அரசியல் பேதங்களை பாராது அரசின் நலத்திட்ட நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைந்து பணியாற்றுவதும் அவரது அரசியல் பண்புகளாக இருந்தது.

மஜக நிர்வாகிகளுடன் தொகுதியில் எப்போதும் நெருக்கமான நட்பை பேணி வந்தார்.

சமீபத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டப்போது மஜக-வினர் ஒடோடி வந்து அவருக்கு ரத்ததானம் செய்து அன்பு பாராட்டினர்.

அத்தகைய மிகுந்த நட்புக்குரிய தோழர் நம்மிடமிருந்து விடை பெற்றிருக்கிறார்.

அவரை இழந்து தவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நாகை நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி,
தலைவர்,
மனித நேய ஜனநாயக கட்சி
13.05.2024.