You are here

ஐயா நல்லக்கண்ணுவுடன் சந்திப்பு…

image

இடதுசாரி இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினருமான ஐயா.நல்லக்கண்ணு அவர்களை நேற்று இரவு அவரது இல்லத்தில் நானும், அவைத்தலைவர் நாசர் உமரீ அவர்களும் சந்தித்தோம்.

சமீபத்தில் ஐயா அவர்களின் மனைவியார் மரணமடைந்தார். பலமுறை நான் நேரில் சந்தித்து ஆறுதல் கூற முயன்றும் அது முடியாமல் போனது.

நேற்று நாங்கள் போனதும், எனது சட்டமன்ற உரைகள் குறித்து பாராட்டியவர் தோழர் மகேந்திரனும், தோழர் லெனினும் என்னைப் பற்றி அடிக்கடி ஐயா அவர்களிடம் பேசுவதாகவும் கூறினார்.

அவரது அருமை துணைவியார் இழப்பு குறித்து நாங்கள் ஆறுதலாக பேசியப் போது, அந்த பொதுவுடைமை போராளியின் முகத்தில் சோகம் நிழலாடியது.

அதைப்பற்றி மேலும் பேசாமல், மணல் கொள்ளை மற்றும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து பேசியவர், சட்டமன்றத்தில் கம்யூனிஸ்டுகள் இல்லாத குறையை நீங்கள் போக்க வேண்டும் என்றும் பேசினார்.

ஐயா அவர்கள் மணல் கொள்ளை தொடர்பாக வழக்கறிஞரை சந்திப்பதற்காக புறப்பட்டார்.

தளராத உணர்வுகள், தடுமாறாத லட்சியங்கள் என ஐயா அவர்களின் வாழ்க்கை இருக்கிறது.

ஐயா அவர்களின் காலத்தில் நாம் வாழ்வது ஒரு மகிழ்ச்சியாகும்.

காமராஜர், காயிதே மில்லத், கக்கன் போன்றவர்களை நாம் பார்த்ததில்லை.
ஐயா நல்லக்கண்ணு அவர்கள் மூவரின் வடிவமாக நம்முன் வாழ்கிறார்.

அவரை சந்தித்து பேசுவதே நமக்கு ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறது.

இவண்,

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
16_02_17

Top