எளிமையும் இனிமையும் கலந்த மனிதர் அண்ணன் துரைக்கண்ணு! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!


தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் துரைக்கண்ணு அவர்கள் நேற்றிரவு காலமானார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம்.

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் , உயர் தர சிகிச்சை மூலம் எப்படியும் மீண்டு வந்து விடுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் மரணமடைந்துள்ளார் என்பது அனைவரின் இதயங்களையும் கனக்க செய்கிறது.

பதவியில் இருந்த போதும் பணிவுடன் பணியாற்றியதும், பார்க்கும் எல்லோரிடமும் புன்னகையை உதிர்த்து கோரிக்கைகளை எதிர்கொண்டதும் அவரை எளிமையும், இனிமையும் கொண்ட நல்ல அரசியலாளராக மக்களிடம் கொண்டு சென்றது.

அதன் காரணமாகவே பாபநாசம் தொகுதி மக்கள் அவரை தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெறச் செய்தனர்.

சாதி, மத , அரசியல் பாகுபாடின்றி அவர் எல்லோரிடமும் உளப்பூர்வமாக பழகினார். கனிவுடன் அனுகினார்.

அய்யம்பேட்டை, பண்டார வடை, ராஜகிரி, வழுத்தூர் போன்ற பகுதிகளில் அவரை தங்கள் உறவினர்களில் ஒருவராக மக்கள் கொண்டாடினர். இதை அவர் அடிக்கடி என்னிடம் சொல்லி மகிழ்வார்.

மனிதநேய ஜனநாயக கட்சியினர் மீது அவர் மிகுந்த அன்பு காட்டினர். அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நீங்கள் மேலும் மேலும் வளர வேண்டும் என வாழ்த்துவார்.

அவரோடு இடைதேர்தல் களில் இணைந்து பணியாற்றியது,ரயில் பயணங்களில் உரையாடியது, அவரது அலுவல் அறையில் சந்தித்து பேசியது என அவரது நினைவுகள் மறக்கமுடியாதவை.

இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து பொதுப் பணியாற்ற வேண்டிய நல்ல மனிதரை, கொரோனா எனும் கொரில்லா நோய் கொள்ளைக் கொண்டது வேதனையளிக்கிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், முதல்வர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், அதிமுக தோழர்கள், பாபநாசம் தொகுதி மக்கள் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அனைவரின் துயரத்திலும் பங்கேற்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,

#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி,
01.11.2020