நீட் தற்கொலைகளுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை.!

நீட் பயிற்சி தேர்வுக்கான தயார் நிலையில் இருந்த போது அச்சம் மற்றும் மன உளைச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் 3 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்திருப்பது தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

மதுரை மாவட்டத்தில் ஜோதி ஸ்ரீ துர்கா, தர்மபுரி மாவட்டத்தில் ஆதித்யா, நாமக்கல் மாவட்டத்தில் மோதிலால் என மூன்று பிஞ்சுகளை ஒரே நாளில் பறிகொடுத்திருக்கிறோம்.

வண்ணத்துப்பூச்சிகளாய் சிறகடிக்க வேண்டியவர்கள் சவப்பெட்டிகளில் மாண்டு கிடப்பது வேதனையளிக்கிறது.

இந்த தற்கொலைகளுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்.

எதிர்கால இளவல்களை இழந்து நிற்கும் இக்குடும்பங்களுக்கு தமிழக அரசு அளிக்கும் உதவிகள் போதாது. அவற்றை மும்முடங்கு உயர்த்தி கொடுக்க வேண்டும்.

அது போல் இந்த தற்கொலைகளுக்கு காரணமான மத்திய அரசு, இக்குடும்பங்களுக்கு தலா 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக மாணவர் சமுதாயம் தலை நிமிர்ந்து போராட தயாராக வேண்டிய தருணத்தில், தற்கொலை எண்ணங்களை தூக்கியெறிய வேண்டும் என்றும், விரிந்து கிடக்கும் பெரும் உலகில் தன்னம்பிக்கையோடு வாழ உறுதி ஏற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி,
13.10.2020