தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்போம்! முதமிமுன்அன்சாரி MLA மே தின வாழ்த்துச்செய்தி!

தொழிற்புரட்சி ஏற்பட்ட காலத்தில் தொழிலாளர்களை ஒடுக்கி அவர்களை வலுக்கட்டாயமாக வேலை வாங்கும் போக்கு நடைபெற்றது.

அதற்கெதிராக தொழிற்சங்கங்கள் பலநாடுகளில் வலிமை பெற்று கிளர்ச்சி செய்தன.

1836 இல் இங்கிலாந்தில் 10 மணி நேரம் மட்டுமே வேலை எனும் முழக்கங்கள் எழுந்தன.

1850களில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் 8 மணி நேரம் மட்டுமே வேலை என போராட்டங்கள் நடைபெற்றது.

1850 ஜெனிவாவில் கூடிய உலகத் தொழிலாளர்கள் மாநாட்டில் காரல் மார்க்ஸ் அவர்கள் 8 மணி நேர வேலையை வலியுறுத்தி முழங்கினார்.

1886ல் மே 1 இல் அமெரிக்காவில் நாடு தழுவிய தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. அதில் பங்கேற்ற தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்போராட்டம் அடுத்தாண்டு 1887லிலும் தொடர்ந்தது. பல தொழிற்சங்க தலைவர்கள் தூக்கிலிப் பட்டனர்.

மே தினத்திற்கான குரல் வலிமைப்பட இவர்களின் தியாகங்கள் உரமாயின.

1889ல் பாரிசில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிற்சங்க தலைவர்கள் கூடி, மே முதல் நாளை தொழிலாளர் தினமாக அறிவிக்க உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

அப்போது 1890 மே முதல் நாளை சர்வதேச தொழிலாளர் நாளாக கொண்டாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

1912 மற்றும் 1914 ஆம் ஆண்டுகளில் ரஷ்யாவில் நடைப்பெற்ற தொழிலாளர் போராட்டங்களுக்கு பிறகு 1917 முதல் அங்கு மே தினம் உலக திருவிழாப் போல கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் 1923ல் மே தினம் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தலைமையில் கொண்டாடப்பட்டது .

இந்தியாவில், 1934 லிருந்து மே தினத்திற்கு விடுமுறை கேட்டு இடதுசாரிகள் ஆதரவோடு தொழிலாளர்கள் பேரணி நடத்தினர்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோது அவரது ஆணைக்கிணங்க, 1967 முதல் தமிழகத்தில் மே தினம் அரசு விடுமுறையோடு கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று கொரோனா வின் காரணமாக உலகமே ஊரடங்கில் தவிக்கிறது.

இந்தியாவில் 40 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் வருவாய் இழந்து துன்பப்படுகிறார்கள்.

மத்திய அரசு அவர்களைப் பற்றி கவலைப்படுவதாகவோ, அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு உதவுவதாகவோ தெரியவில்லை

இத்துயரம் மிகுந்த சூழலில்,2020 – மே தினத்தில் தொழிலாளர்களின் உரிமைகளை காக்க உறுதி ஏற்போம் என்று கூறி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தொழிலாளர் தோழர்களுக்கு மனமார்ந்த மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA.,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.