புதிய வடிவ ஜனநாயக போராட்டங்களை கையிலெடுப்போம்..! சட்ட மன்ற வளாகத்தில் ஒரு மணி நேர காத்திருப்பு போராட்டத்திற்கு பின்பு முதமிமுன் அன்சாரி MLA அறிவிப்பு.!


சென்னை.மார்ச்.11.,

இன்று தமிழக சட்டமன்றத்தில் பூஜ்ய நேரத்தில் குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரி, திமுக, காங்கிரஸ், மஜக, IUML கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று பேசினார்.

இதில் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என மாண்புமிகு துணை முதல்வரும், மாண்புமிகு அமைச்சர்களும் கூறுவது உங்கள் நல்லெண்ணத்தை காட்டுகிறது.

ஆனால் பீகார் மாநில அரசு சட்டபேரவையில் இதற்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது போன்று, ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இதனால் எல்லா மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை தெலுங்கானா முதல்வரே கூறியுள்ளார்.

எனவே நீங்கள் தீர்மானம் நிறைவேற்ற மறுப்பதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் என்று கூறி வெளிநடப்பு செய்தார்.

பிறகு 1 மணி நேரம் சட்டமன்ற வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் அதிரடியாக ஈடுபட்டார்.

அங்கிருந்த காவல்துறையினர் “உங்களை கைது செய்கிறோம்” என்றவுடன் கைதுக்கு தயாராகி வண்டியில் ஏற முற்பட்டபோது, உங்களை கைது செய்யவில்லை என்று கூறி, நீங்கள் காத்திருப்பு போராட்டத்தை நடத்தலாம் என காவல்துறை கூறியது.

அதன் பிறகு காத்திருப்பு போராட்டத்தை அங்கு அவர் தொடர்ந்தார்.

அப்போது ஊடகங்களிடம் பேசியவர், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, சிரோன்மணி அகாளிதளம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி போன்ற கட்சிகள் குடியுரிமை சட்டங்களை எதிர்கின்றன.

பாராளுமன்றத்தில் இதனை ஆதரித்து வாக்களித்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்கள், பீகார் சட்டமன்றத்தில் இதற்கு எதிராக தீர்மானத்தையே நிறைவேற்றிவிட்டார்.

அதைப் போல இங்கும் அம்மா அவர்களின் அரசு சார்பில் நீங்களும் தீர்மானம் போடுங்கள் என அறவழியில் போராடுகிறோம் என்றார்.

50 கோடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும், 13 மாநில அரசுகள் இதே போல சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களும், தொண்டர்களும் இதையே விரும்புவதாகவும், அவர்கள் களத்தில் சங்கடங்களை சந்திப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழக மக்களின் மனநிலையை தமிழக அரசு புரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அவர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது. அகில இந்திய பார்வார்டு பிளாக் தலைவர் கதிரவன் Ex MLA, அவர்கள் வருகை தந்து, அவருடன் சிறிது நேரம் அமர்ந்து இப்போராட்டத்தை தாங்கள் ஆதரிப்பதாக கூறினார்.

அடுத்து காங்கிரஸ் சட்டமன்ற கொறடா விஜயதரணி MLA அவர்களும் அங்கு வந்து இப்போராட்டத்தை ஆதரித்து அவருடன் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.

பிறகு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.ராமசாமி அவர்கள் அங்கு வந்து, அவருக்கு கைக் கொடுத்து காங்கிரஸ் கட்சி, தங்களின் போராட்டத்தை ஆதரிப்பதாகவும் கூறினார்.

ஒரு மணி நேர காத்திருப்பு போராட்டத்திற்கு பிறகு, பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.

தொடர்ந்து எல்லா சாதி தலைவர்களையும், ஜனநாயக சக்திகளையும் இணைத்து புதிய வடிவ ஜனநாயக போராட்டங்களில் ஈடுபட போவதாக கூறி விட்டு புறப்பட்டார்.

தகவல்:
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#சட்டபேரவை_வளாகம்.
11-03-2020