உயிரை_இழக்காமல்_வாழ்ந்து_போராடுவோம்!

(மஜக பொதுச்செயலாளர் வெளியிடும் பத்திரிகை அறிக்கை)

காவிரி உரிமையை முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சி நடத்திய பேரணியில் அருமைத் தோழர் விக்னேஷ் தன்னுயிரை தீயிலிட்டு தமிழகத்தை பதற வைத்திருக்கிறார்.

தஞ்சை தரணியை பூர்வீகமாக கொண்ட அவர் சமூக இணைய தளத்தில் தீவிரமாக இயங்கியவர். தமிழ் தேசியம், திராவிட இயக்க வரலாறு, காவி மதவெறி எதிர்ப்பு ஆகியவற்றில் ஆழமான சிந்தனைக் கொண்டவர்.

காவிரி உரிமை காக்க வாழ்ந்து போராட வேண்டியவர் தன்னுயிரை மாய்க்க புறப்பட்டது பேரதிர்வை தருகிறது. அவர் எழுதியுள்ள கடித ஆவனம் தமிழினத்தின் கொள்ளை அரசியலை முன் வைக்கும் விதத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் நேற்று அவர் மருத்துவமனையில் துடித்த போது அவர் எப்படியாவது பிழைக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினேன்.

அவருக்கருகில் இருந்த அண்ணன் சீமானிடமும், தோழர் P.R.பாண்டியனிடமும் அலைபேசியில் தொடர்புகொண்டு என் வேதனையை; துயரத்தை பகிர்ந்து கொண்டேன்.

தோழி. செங்கொடி, தோழர். முத்துக்குமார் வழியில் தோழர் விக்னேஷ் எடுத்த முடிவை ஏற்கவே முடியாது. இனம் மானம் காக்க பெரியார் வழியில் வாழ்ந்து போராட வேண்டும்.

26 வயதே நிரம்பிய அந்த கொள்கை பூங்கொத்து தீயில் கருகி உயிர் தியாகம் செய்திட்ட துயர செய்தி வந்த போது, கடையடைப்பில் மூழ்கி இருந்த தமிழ்நாடு மேலும் சோகமயமாகி இருக்கிறது.

ஏற்க முடியாத, குலை நடுங்க செய்யும் பாதகத்தை செய்து விட்டாரே என மனம் பதறுகிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கும், கொள்கை தோழர்களுக்கும், நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும்
மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

M. தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயளாலர்
மனிதநேய ஜனநாயக கட்சி.