கட்சி ஆரம்பித்த 81 வது நாளில் மஜகவுக்கு ஒரு MLA .!

அன்பார்ந்த சகோதர … சகோதரிகளே ..

ஏக இறைவனின் அமைதியும் , சமாதானமும் உரித்தாகுக .!

தமிழகம் முழுக்க அதிமுக கூட்டணி சிறப்பான வெற்றியை பெற்றிருக்கிறது . மீண்டும் 6-வது முறையாக முதல்வர் பதவியை ஏற்கவிருக்கும் டாக்டர் . அம்மா அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் . மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பான ஆட்சியை அவர்கள் வழி நடத்த இறைவனிடம் பிராத்திக்கிறேன் . அதுபோல கூட்டணியில் வெற்றி பெற்ற இதர தலைவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .

வேலூரில் மஜக பொருளாளர் எனது அருமை நண்பர் ஹாரூன் ரஷீது அவர்கள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது எனக்கு தனிப்பட்டமுறையிலும் வருத்தத்தை தந்திருக்கிறது . எங்குபோனாலும் இணைந்தே பயணிக்கும் நாங்கள் , சட்டமன்றத்திற்கும் அவ்வாறு செல்லமுடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது . ஹாரூன் அதை இலகுவாக எடுத்துக் கொண்டுவிட்டாலும் எனக்கு வலியாக இருக்கிறது .எனினும் , இறைவன் இதைவிட ஒரு சிறப்பை அவருக்கு நாடியிருப்பதாக எண்ணுகிறேன் .

இறைவனின் பேரருளால் , நான் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறேன் . எல்லா புகழும் இறைவனுக்கே ..!

இந்த வெற்றி மாபெரும் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும் .

நாகப்பட்டினத்தில் ப ஜ க வும் , ம ம க வும்  மண்ணின் மைந்தன் கோஷத்தை ஒருசேர எழுப்பி ,ஆங்காங்கே கூட்டம் போட்டு என்னை ஒருமையில் வசைப்பாடினார்கள் .

அனைத்தையும் முறியடித்து தொகுதி மக்கள் 20,550 வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள் . இது நாகப்பட்டினம் தொகுதியில் யாரும் இதுவரை பெறாத வாக்கு வித்தியாசமாகும் .

நாகப்பட்டினம் தொகுதி மக்கள் மண்ணின் மைந்தன் கோஷத்தை தூக்கியெறிந்து , இதே மாவட்டத்தை சேர்ந்த என்னை தகுதியான வேட்பாளர் என்ற அடிப்படையில் வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள் . அனைவருக்கும் ஏற்ற பொது வேட்பாளராக அங்கீகரித்து வாய்ப்பை தந்திருக்கிறார்கள் .

இதற்காக பாடுபட்ட அதிமுக , மஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியின் தோழர்களுக்கும் , வாழ்த்துக்களை தெரிவித்தவர்களுக்கும் , தொடர்ந்து பிரார்த்தனை  செய்த நல் உள்ளங்களுக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .

சமுதாயத்தில் உள்ள அனைவரும் எனது வெற்றியை தங்கள் வீட்டுப் பிள்ளைக்கு கிடைத்த வெற்றியாக கருதி மகிழ்கிறார்கள் . எல்லா சமுதாயங்களையும் சேர்ந்த அரசியல் கவனிப்பாளர்கள் என்னை ஒரு பொது தலைவராக அங்கீகரித்து வாழ்த்து தெரிவிக்கிறார்கள் . அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .

இறையருளால் , அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் நேர்மையாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது . மஜக தொடங்கி 81-வது நாளில் கட்சி 1 MLA கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது .

#எமக்கு_கிடைத்த_இந்த_வெற்றியை அக்டோபர் 6 , 2015 #முதல்_எங்களோடு பயணிக்கும் #மஜக_சகோதரர்களின் #கரத்தில்_ஒப்படைத்து_ஆறுதல் பெறுகிறோம்…

இறைவன் மிகப் பெரியவன் . அவன் நீதியாளன் . அநீதி இழைக்கப்பட்டவர்களை அவன் கைவிடுவதில்லை .

எல்லா புகழும் இறைவனுக்கே ..!
இறுதி வெற்றி நமது அணிக்கே ..!

அன்புடன்

M. தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
20-05-2016

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.