நிர்பயாவுக்காக டெல்லியில் போராடியவர்கள் மணிப்பூர் பெண்களுக்காக ஏன் போராடவில்லை? ஆம்பூரில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கேள்வி…

ஆம்பூரில் கூட்டமைப்பு சார்பாக ஒன்றிய அரசு கொண்டு வரத் துடிக்கும் பொது சிவில் சட்டத்திற்கு (UCC) எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், பொதுசிவில் சட்டம் நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிரானது என்றும், அவரவர் மதத்தினர் தனிப்பட்ட வாழ்வில் பின்பற்றும் உரிமையியல் சட்டங்களால் யாருக்கும் பாதிப்பில்லை என்றும் கூறினார்.

சுமார் 400 உரிமையியல் – தனிச்சட்டங்களில் முஸ்லிம்களுக்கு, கிரித்தவர்களுக்கு தலா 4 மட்டுமே உள்ளது என்றும், மற்றவை இந்துக்கள் உள்ளிட்ட பிற மக்களுக்குரியது என்றும் முன்னாள் ஒன்றிய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியதை எடுத்துக்காட்டி, இதனால் சிறுபான்மையினருக்கு மட்டுமின்றி, எல்லா மக்களுக்கும் பாதிப்பு வரும் என்றும் பேசினார்.

பிறகு அவர் மணிப்பூர் கலவரம் குறித்து பேசினார்.

அப்போது பேசியதாவது….

மணிப்பூர் கலவரங்கள் தொடர்பாக, பிரதமர் 2 மாதங்களுக்கு மேலாக 1800 மணி நேரம் அமைதியாக இருந்து விட்டு, அங்கு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட காணொளி பரவிய பிறகு வாய் திறக்கிறார்.

30 வினாடிகள் மட்டும் அது பற்றி கண்டித்து பேசுகிறார்.

சர்வதேச சமூகத்தின் கண்டனத்திற்கு பயந்தே வாய் திறந்துள்ளார்.

இதற்காக, ஏன் எல்லோரும் இப்படி போராடுகிறீர்கள்? என சிலர் கேட்கிறார்கள்.

உங்கள் வீட்டு பெண்களுக்கு இப்படி ஒரு அநீதி நடந்தாலும் இப்படித்தான் நீதிக்காக போராடுவோம். உரத்து குரல் கொடுப்போம். அது தான் மனிதநேயம்.

முன்பு காங்கிரஸ் ஆட்சியின்போது டெல்லியில் நிர்பயா என்ற பெண் கற்பழிக்கப்பட்டார்.

அதை எல்லோரும் கண்டித்து குரல் எழுப்பினோம்.

யாருக்கு இந்த அநீதி நடந்தாலும் அதை கண்டிக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் அதை சிலர் திட்டமிட்டு பெரிதாக்கி, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அரசியல் அலையாக மாற்றினார்கள்.

அந்த போராட்டங்கள் வழியாக நவீன டெல்லியை கட்டமைத்த காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீக்சித்தை தோற்கடித்தார்கள்.

அதே நபர்கள், அதே டெல்லியில், ஆடை அவிழ்க்கப்பட்ட மணிப்பூர் சகோதரிகளுக்காக ஏன் போராடவில்லை?

டெல்லியில் நடந்தது தனிப்பட்ட சம்பவம்.

மணிப்பூரில் நடந்தது கலவரம் தொடர்பானது. கூட்டு பாலியல் வன்முறை.

இரண்டும் ஒரே வகை தவறு தான். எனினும் சம்பவங்களின் பின்னணிகள் வெவ்வேறானவை. இருந்தும் வலதுசாரிகள் இரட்டை நிலைபாடுகளை எடுக்கிறார்கள்.

இதில் தான் சிலரின் வஞ்சகம் வெளிப்படுகிறது.

அன்று காங்கிரஸ் தலைமையிலான UPA அரசை கண்டித்து, ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரே இப்போது எங்கே?

பாஜக-வின் ஊழல்கள் குறித்து ஏன் பேசவில்லை?

இத்தகைய நுண்ணிய அரசியலை நாம் உன்னிப் பாக கவனிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதன்பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்தவர், மணிப்பூரில் நடைபெறும் கலவரத்திற்கும், உயிரிழப்புகளுக்கும் பிரதமர் மோடியும், மணிப்பூர் மாநில பாஜக அரசுமே பொறுப்பு என குற்றம் சாட்டினார்.

மழைக்கு மத்தியில் நடைபெற்ற பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான இக்கூட்டத்தில், மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, கூட்டத்தினர் ஒரு நிமிடம் செல்போன் விளக்குகளை ஒளிரவிட்டு மெளனம் கடைப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதில் மஜக மாநில துணைச்செயலாளர் ஓசூர் நெளசாத், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஜஹிருல் ஜமா, வேலூர் மாவட்ட செயலாளர் ஏஜாஸ், வழக்கறிஞர் அலிம் அல் புகாரி, SDPI சார்பில் பயாஸ் அஹமது, இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் முஹம்மது சாதிக், AIMIM சார்பில் முகமது இக்பால் உள்ளிட்டோரும்.

மேலும் மஜக மாவட்ட துணைச்செயலாளர் முன்னா, இளைஞரணி மாவட்ட செயலாளர் சையது வசீம், ஆம்பூர் நகர செயலாளர் ஜிஷாந் பாஷா உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருப்பத்தார்_மாவட்டம்
23.07.2023