நெற்பயிர்களை மட்டுமல்ல நற்பெயர்களையும் பெற்று தாருங்கள்… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…

மயிலாடுதுறையில் EOROKIDS SCHOOL சார்பில் 11-ஆம் ஆண்டு விழா “நம்ம உழவன்” என்ற தலைப்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு அதன் தாளாளர் சாதிக் தலைமை ஏற்றார்.

இந்நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, மேதகு அப்துல் கலாமின் உதவியாளராக பணிபுரிந்த டாக்டர் பொன்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் விவசாயத்தையும், விவசாயிகளையும் முன்னிறுத்தி கலை நிகழ்ச்சிகளும், காட்சி அமைப்புகளும் முன்னெடுக்கப்பட்டன.

வளரும் தலைமுறை மாணவ – மாணவிகளிடம் விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஊட்டும் வகையில் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

டாக்டர் பொன்ராஜ் பேசும்போது, சீனாவில் ஒரு ஏக்கருக்கு 6-டன் நெல் விளைவிக்கப்பட்டது. தமிழகத்தில் “திருத்திய நெல் சாகுபடி திட்டத்தின்” மூலம் 7-டன் நெல் விளைவிக்கப்பட்டது.

ஆனால் அதைப்பற்றிய விழிப்புணர்வு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவில்லை என வருத்தப்பட்டார்.

மேலும் நமக்கு அரசியல்வாதிகளை விட தமிமுன் அன்சாரி போன்ற அரசியல் தலைவர்கள்தான் தேவை என்றும், இவரைப் போன்றவர்கள்தான் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்றும் பாராட்டி பேசினார்.

பிறகு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேசியதாவது…

எல்லா மொழிகளையும் கற்க வேண்டும், ஆனால் தாய் மொழியை இழந்து விடக்கூடாது. அறிவியலையும், முற்போக்கு சிந்தனைகளையும் வரவேற்க வேண்டும் .

ஆனால் பழமையையும், மரபுகளையும், பண்பாடுகளையும், ஒழுக்கத்தையும் இழந்து விடக்கூடாது.

பிள்ளைகளிடம் பாட புத்தகங்களையும் கடந்து, இதர வாசிப்பு பழக்கங்களையும் உருவாக்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் அவர்கள் தொலைந்து விடக்கூடாது.

வளரும் தலைமுறையை போதை மருந்து கலாச்சாரங்களில் இருந்து பாதுகாக்க கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.

நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.

இந்த ஆண்டு விழா வித்தியாசமான புரிதல்களுடன் நடத்தப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

இது விவசாய பூமி. இங்கு நெற்பயிர்களை மட்டுமல்ல… நற்பெயர்களையும் பெறும் வகையில் பிள்ளைகளை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் சேவகர் நிமல், பொழுதுபோக்கு நிகழ்ச்சியாளர் கரிம், நகைச்சுவை பேச்சாளர் அறங்கதாங்கி நிஷா, ஊடகவியலாளர் பனிமலர் ஆகியோரும் பங்கேற்றனர்.

இதில் மஜக சார்பு தொழிற்சங்கமான MJTS மாநில துணைச் செயலாளர் ஆக்கூர் ஷாஜகான், மாவட்ட பொறுப்பு குழு தலைவர் சலீம், பொறுப்பு குழு உறுப்பினர்கள் ரியாஸ், அஜிமல் உசேன், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல செயலாளர் நீடூர் குர்ஷித் கான், மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் ஜெப்ருதீன், விவசாய அணி மாவட்ட செயலாளர் லியாகத் அலி, நிர்வாகிகள் மாலிக், ஃபஹத், நூருல் அமீன் ஆகியோர் பங்கேற்றனர்