பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் கட்சி செயல்படுகிறது. அவைத் தலைவர் மன்னை செல்லச்சாமி அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியில் கோஷ்டிகளை உருவாக்கும் நோக்குடனும், கட்சியை பிளவுபடுத்தும் வகையிலும், கட்சியின் விதிமுறைகளை தொடர்ந்து மீறிடும் வகையிலும் செயல்பட்ட காரணத்தினால் கடந்த 07.02.2023 அன்று கட்சியில் பொருளாளராக செயல்பட்டு வந்த ஹாருன் ரசீத், அவைத் தலைவராக செயல்பட்டு வந்த நாசர் உமரி, ஆகியோர் அவர்கள் வகிக்கும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதற்கு 40 மாவட்டங்கள் எழுத்துப்பூர்வ பரிந்துரை செய்துள்ளனர்.

சிறப்பு நிர்வாக குழுவில் விவாதிக்கப்பட்டு, தலைமை நிர்வாக குழுவில் உறுதி செய்யப்பட்டது.

கட்சியின் பைலா (அமைப்பு விதி) விதி எண் 48 உட்பிரிவு 4-ன் படி, கட்சியிலிருந்து நடவடிக்கைக்கு ஆளானவர்கள் எவரும் கட்சியின் பெயரையோ, கொடியையோ எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது.

நேற்று (18.02.2023) திண்டுக்கலில் கட்சியிலிருந்து ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் நடத்திய ஒரு கூட்டத்தில் அங்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பேனரை அவர்கள் பயன்படுத்தியதை அறிந்து, அதை காவல்துறை அகற்றி இருக்கிறது.

அப்படி நடைபெற்ற ஒரு கூட்டத்தில், மனிதநேய ஜனநாயக கட்சியிலிருந்து பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை நீக்கியதாக ஊடகங்களுக்கு செய்தி கொடுத்திருக்கிறார்கள்.

அதை வன்மையாக இந்த சிறப்பு நிர்வாக குழு கண்டிக்கிறது.

கட்சியில் நடவடிக்கைகளுக்கு ஆளானவர்கள் ஏற்பாட்டில் தமிழகம் முழுவதிலிருந்து 145 பேரை மட்டுமே திரட்டி அறிவித்திருக்கும் இந்த உண்மைக்கு மாறான தகவலை எவரும் நம்ப வேண்டாம் என்றும், கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் ஒற்றுமையோடு செயல்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.