நெய்வேலி காவல் நிலையத்தில் செல்வமுருகன் அடித்து கொலை! காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!


கடலூர் மாவட்டம் காடாம்புலியூரில் முந்திரி வணிகம் செய்து வந்த செல்வமுருகன் என்ற வணிகர் நெய்வேலி காவல் நிலையத்தில் காவலர்களால் சித்ரவதை செய்து கொல்லப்பட்டிருப்பதாக அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அவர், அக்டோபர் 30 முதல் நெய்வேலி காவல் நிலையத்தில் சித்ரவதை சம்பவங்களை அனுபவித்திருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக நவம்பர் 2 அன்று அவரது மனைவி பிரேமா மற்றும் பிள்ளைகள் முன்பு அவர் காவலர்களால் கைத்தாங்கலாக அழைத்து வந்து காட்டப்பட்டிருக்கிறார்.

பிறகு நவம்பர் 4 அன்று விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அவர் இறந்து விட்டதாக அவரது மனைவியிடம் காவலர்கள் கூறியுள்ளனர்.

ஒருவர் மீது குற்றம் இருப்பின் அவரை சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு உட்படுத்தாமல், மனித உரிமை மீறல்களுடன், அவரை காவலர்களே அடித்து கொல்வது என்பது சட்ட விரோத செயலாகும். இது தொடர்வது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

அவரது உடலை குடும்பத்தினர் முன்பு வீடியோ பதிவுடன் உடற்கூராய்வு செய்ய வேண்டும் என்று எழுப்பப்படும் கோரிக்கை நியாயமானது.

மேலும் காவல்துறையின் ஒழுங்குகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் அத்துமீறிய காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவிட வேண்டுமென, தமிழக அரசை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
07.11.2020