குழந்தைகளை பாதிக்கும் ஆபத்தான செயலிகளையும் மத்திய அரசு தடை செய்ய வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை!

இந்தியாவின் நலன்களுக்கு ஊறு விளைவிப்பதாக கூறி, டிக் – டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதை வரவேற்கிறோம்.

டிக் டாக் செயலி சட்டம் – ஒழுங்கையும், சமூக அமைப்பையும் பாதிப்பதால் அதை தடை செய்ய வேண்டும் என மஜக சார்பில் கடந்தாண்டு சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். அது நாடு முழுக்க எதிரொலித்தது.

தற்போது இது போன்ற மேலும் பல செயலிகள் நமது நாட்டின் பொது சமூகத்திற்கும்,வளரும் தலைமுறையின் நலன்களுக்கும் கேடு விளைவிக்கின்றன.

ஆரோக்கியம் பேணும் வகையில் ஒடி, விளையாடி வளர வேண்டிய பிள்ளைகள் கழுத்து வலிக்க, கண் சிவக்க ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வருகின்றனர்.

அவர்கள் ஆரோக்கியத்தையும், சிந்திக்கும் ஆற்றலையும் இழந்து நோயாளிகளாக மாறுவது நமது சமூக அமைப்பிற்கு விடப்பட்டிருக்கும் சவாலாகும்.

இது போன்ற செயலிகள் உளவியல் ஊனமுற்றவர்களாக நம் சமூகத்தை மாற்றிடும் ஆபத்தை உருவாக்குகின்றன என்பதை பொறுப்புணர்வுடன் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

எனவே நம் நாட்டு மக்களின் எதிர்கால நலன் கருதி பப்ஜி, ஆன்லைன் ரம்மி போன்ற செயலிகளையும் மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
01.07.2020