விவசாய தொழில்களில் முதலீடு செய்வதே பாதுகாப்பானது : முதமிமுன்அன்சாரி MLA உரை!

மே 12.

கத்தார் மனிதநேய கலாச்சாரப் பேரவையின் நிர்வாகிகளுடன் நேற்று Z00M காணொளி வழியாக மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA உரையாற்றினார்.

அவரது உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு…

தாயகத்தில் உள்ள குடும்பத்தினர், உறவினர்களை எல்லாம் பார்க்க வேண்டும் என நீங்களும், உங்களையெல்லாம் பார்க்க வேண்டும் என அவர்களும் துடிக்கக் கூடிய நிலையை கொரோனா உருவாக்கி விட்டது.

உயிர் வாழும் போராட்டத்தை உலகம் சந்திக்கிறது யாருக்கு இந்த நோய் இருக்கிறது? என்று யாருக்கும் தெரியாத வினோதம் நிலவுகிறது.

உலகப் பொருளாதாரம் நிலை குலைந்து உள்ளது. வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கல்வியாண்டு எப்போது தொடங்கும் என்பதே தெரியவில்லை. இவ்வாண்டு வகுப்புகள் எல்லாம் வீடியோ கான்ஃபரன்சிலும், வாட்ஸ் அப்பிலும் தான் நடக்கும் என தெரிகிறது.

வாழ்வியலில் நிறைய மாற்றங்கள் ஏற்படக் கூடும். அதற்கேற்ப நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொருளாதார நெருக்கடியால் பணப்புழக்கம் பாதிக்கப்படும். வேலை இழப்புகள் பெருகும்.

உலகளாவிய பாதிப்பு காரணமாக, வெளிநாடுகளில் வேலை செய்பவர்களில் கணிசமானோர் தாயகம் திரும்பக்கூடிய நிலையும் உருவாகும்.

அவர்கள் இனி புதிய வருவாயை உருவாக்கிக் கொள்ள திட்டமிட வேண்டும். இன்றைய நிலையில் புதிய தொழில்களில் முதலீடு செய்வது என்பதும் ஆபத்தானது.

தற்போது மளிகை வியாபாரம், காய்கறி வியாபாரம், மருந்துக் கடை வியாபாரம் மட்டுமே லாபகரமான நிலையில் உள்ளது. பிற வணிகங்கள் பணப்புழக்கத்தின் அடிப்படையிலேயே சீராகும்.

உற்பத்தி துறைகளும், சேவைத் துறைகளும் மீட்சிப் பெற வெகு நாட்களாகலாம்.

இன்றைய சூழலில் விவசாயத் துறையில் முதலீடு செய்வதே பாதுகாப்பானதாக தெரிகிறது. அரசு மானியங்களும் இதற்கு எளிதாக கிடைக்கும்.இதில் குறைந்தப்பட்ச ஆபத்துகளே உள்ளது.

நான் கூறும் இது மட்டுமே தீர்வல்ல. இதுவும் ஒரு ஆலோசனை. அவ்வளவுதான். சேமித்த பணத்தை வீணாக்காமல், புதிய வருவாயை ஈட்ட முயற்சி செய்ய வேண்டும் என்பதே என் கருத்தாகும்.

ஆடம்பர செலவுகளை குறைத்து, காலச் சூழலை கவனத்தில் கொண்டு வாழ வேண்டிய நிர்பந்தத்தை கொரனா ஏற்படுத்தியுள்ளது.

இவற்றை எதிர்கொள்வதுதான் கொரனா நமக்கு விடுத்திருக்கும் சவாலாகும். அதை துணிந்து எதிர்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர், அவைத் தலைவர் நாசர் உமரி, ஆகியோரும் பங்கேற்றனர்.

தலைமை செயற்குழு உறுப்பினர் கீழை.உசேன் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க தற்போதைய நிர்வாகிகளுடன், முன்னாள் நிர்வாகிகளும் பங்கு பெற்றனர்.

கத்தாரில் MKP சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்தும், இனி ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுப் பெற்றது.

தகவல்,

#தகவல்தொழில்நுட்பஅணி
#MKP_IT_WING
#மனிதநேயகலாச்சாரப்பேரவை
#கத்தார்