அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா அம்மா வருவதே சிறந்தது! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பேட்டி

டிச.11., மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நாகப்பட்டினத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.அப்போது கூறியதாவது..

திராவிடக் கட்சிகளில் பெரிய கட்சியாக அதிமுக திகழ்கிறது. பொன்மனச்செம்மல் MGR அவர்கள் உருவாக்கிய, மாண்புமிகு அம்மா அவர்கள் வளர்த்தெடுத்த அதிமுக சிறப்பாகவும்,வலுவாகவும் செயல்பட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி விரும்புகிறது.

அம்மா அவர்களின் மரணம் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை உருவாக்கியிருக்கிறது. இப்போது அதிமுகவுக்கு பொதுச்செயலாளர் யார் ?என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இருக்கும் ஆதிக்க சக்திகள் அதிமுகவை கபளீகரம் செய்யவும்,அதை பிளவுப்படுத்தவும் முயல்வதாக செய்திகள் வருகின்றன. சமூக இணைய தளங்களில் திட்டமிட்டு அவதூறுகள் பரப்பப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் நலனுக்காக அதிமுக வலுவோடு செயல்பட வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள்.எனவே அதிமுகவை சிறப்பாகவும் ,கட்டுக் கோப்பாகவும் வழி நடத்த அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா அம்மா அவர்கள் வருவதுதான் சிறந்தது என தோழமை அடிப்படையில் மனிதநேய ஜனநாயக கட்சி விரும்புகிறது.

காரணம் 33 ஆண்டு காலமாக மறைந்த அம்மா அவர்களோடு அவர் பயணித்திருக்கிறார்.பல அரசியல் முடிவுகளில் பங்கேற்றிருக்கிறார்.அவரது எண்ண ஓட்டங்களை அறிந்தவர்.கட்சியை அவர் எவ்வாறு வழிநடத்தினார் என்பது  நன்கு தெரியும்.

மேலும் அதிமுக நிர்வாகிகளோடும்,தொண்டர்களோடும் தொடர்பில் இருந்து வருகிறார்.எனவே தான் இக்கருத்தை கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் ,நல்லெண்ணத்தோடு தெரிவிக்கிறோம்.விரைவில் நல்ல முடிவு வரும் என நம்புகிறோம்.எங்களின் வாழ்த்துக்களையும் அதற்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு பொதுச்செயலாளர் பேட்டியளித்தார்.

பேட்டியின் போது துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா,மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், தலைமை செயற்கு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா,சேக் அப்துல்லாஹ் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;
மஜக_ஊடகப் பிரிவு
11_12_16