பிடல் காஸ்ட்ரோ மரணம்! செவ்வானம் இருண்டு விட்டதோ…?

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர்
M. தமிமுன் அன்சாரி வெளியிடும் இரங்கல் அறிக்கை)

ஏகாதிபத்தியத்தை
வீழ்த்தி; மக்கள் விடுதலையை கட்டியமைத்து; புரட்சிகர கியூபாவை உருவாக்கிய மாவீரன் பிடல் காஸ்ட்ரோ இன்று இறந்து விட்டார் என்ற செய்தி கிடைத்தப் போது, உடலில் மின் அதிர்வு ஏற்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.

புரட்சியாளன் சேகுவேராவுடன் இணைந்து, கியூபாவின் பாடிஸ்டா சர்வாதிக்கார அரசுக்கு எதிராக அவர் நடத்திய வீரஞ்செறித்த போர்களங்கள் வரலாறு பாராட்டும் செய்திகளாகும்.

ஏகாதிபத்திய அரசுகளின் வஞ்சக சதிகளை முறியடித்து; உலகம் பாராட்டும் வகையில் அவர் உருவாக்கிய புரட்சிகர கியூபா அரசு; ஒடுக்கப்பட்ட மற்றும் வளரும் நாடுகளுக்கு நம்பிக்கையை ஊட்டியது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் புரட்சி தீயை பரப்பியது. ஏகாதிபத்திய அமெரிக்காவை குலை நடுங்க செய்தது.

வல்லாதிக்க அமெரிக்காவின் அருகில் ஒரு குட்டி தீவாய் இருந்து கொண்டு, வாஷிங்டனின் ஈரக்குலையை நடுங்க செய்த பெருமை பிடல் காஸ்ட்ரோவை சாரும்.

பாலஸ்தீன மக்களுக்காகவும், உலகெங்கிலும் விடுதலைக்காக ஏங்கிய தேசிய இனங்களுக்காகவும் அவர் காட்டிய ஆதரவு மகத்தானது.

ஏகாதிபத்திய நெருக்கடிகளை தாண்டி, கியூபா மக்களுக்கு வேலை, உணவு, கல்வி, மருத்துவம், சுகாதாரம், நியாயமான வருவாய் ஆகியன கிடைக்கும் வகையில் அவர் ஆற்றிய அரசியல் – சமூக சேவைகள் உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
ஆசிய _ஆப்பிரிக்க நாடுகளுக்கு நம்பிக்கை ஊட்டின.

உலகின் சர்க்கரை சின்னமாய் திகழும் கியூபா,
இன்று கண்ணீரில் மூழ்கியிருக்கிறது. தனது அன்பு தந்தையை இழந்து துடிக்கும் கியூபா மக்களின் கண்ணீரில் மனிதநேய ஜனநாயக கட்சி, உணர்வுப்பூர்வமாய் பங்கெடுங்கிறது.
https://www.facebook.com/needhiyinpakkam/
தென் அமெரிக்க கண்டத்தின் செவ்வானம் இன்று இருண்டிருக்கிறது.
பிடல் காஸ்ட்ரோ இறந்திருக்கிறார். ஆனால் அவரது புரட்சிகர பயணம், உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களாலும், உரிமை கேட்கும் தேசிய இனங்களாலும், உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தாலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

வாழ்க பிடல் காஸ்ட்ரோவின் புகழ்!

இவண்,
M. தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
26.11.16