காணாமல் போன நாகை மீனவர்கள் குறித்து நடவடிக்கை! குமரி கலெக்டர் அலுவலகத்தில் M.தமிமுன் அன்சாரி MLA நேரில் மனு!

image

image

குமரி.டிச.13., கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களுக்காக, அம் மாவட்ட மக்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து மஜக பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான
M.தமிமுன் அன்சாரி அவர்கள் இரவிபுத்தூர் துறை, வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை ஆகிய பகுதிகளில் போராடும் மக்களை சந்தித்து பேசினார்.

நாகை நம்பியார் நகர், ஆரிய நாட்டுத் தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த 12 மீனவர்கள் கடலுக்கு புறப்பட்ட வள்ள விளை பகுதிக்கு சென்று அவர்கள் குறித்த விபரங்களை விசாரித்தார்.

பிறகு மாலை 5 மணிக்கு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கலெக்டர் சுற்றுப் பயணத்தில் இருப்பதாக அதிகாரிகள் கூறினர். உடனே கலெக்டரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாகையை சேர்ந்த 12 மீனவர்கள் உட்பட அனைவரையும் தேடும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பிறகு, கலெக்டரின் வேண்டுகோள்படி நாகையை சேர்ந்த 12 மீனவர்கள் குறித்த பெயர் மற்றும் விபரங்களை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் குமரி மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுவிடம் ஒப்படைத்தார். அப்போது  உ.தனியரசு MLA உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பிறகு வெளியே வந்ததும், பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி MLA அவர்கள், மீனவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவையும், அவர்களுடன் மீனவர்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்றும், 1000 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேடுதல் வேட்டையை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும், மீனவர்களுக்காக ரயில் மறியல் போராட்டம் நடத்திய ஆயிரகணக்கான நபர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்றும், மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தகவல்;
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.
12.12.17