புனித ரமலானில்… நோன்பு கஞ்சியை சகோதர சமூகங்களுடன் பகிர்வோம்! நேசத்தை வளர்ப்போம்! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை…

புனிதமிக்க ரமலான் மாதம் இறை நேசத்தை, அன்பை, இரக்கத்தை, கருணையை போதிக்கும் மாதம்.

மனிதர்களிடம் இணக்கத்தை வளர்ப்பவர் சிறந்தவர் என திருக்குர்ஆன் கூறுகிறது.

முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அவர்கள் புனித ரமலான் நோன்பை கடைப்பிடிக்கும் போது, அப்பகுதியில் வசிக்கும் இந்துக்கள், கிருஸ்தவர்கள் என அனைவரும் அவர்களது உணர்வுகளை மதிக்கும் வகையில் நடப்பதை காண்கிறோம்.

மாலை 4 மணிக்கு பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி வினியோகிக்கப்படும் போது, சகல மதத்தவரும் அதை பெற்றுக் கொள்வதை பார்க்கிறோம்.

பள்ளிவாசல்கள், வீடுகளில் நடக்கும் நோன்பு துறப்பு இஃப்தார் நிகழ்வுகளில் சகோதர சமுதாய உறவுகளுக்கு முஸ்லிம்கள் அழைப்பு விடுக்கிறார்கள்.

தங்களது முஸ்லிம் நண்பர்களுக்கு இந்துக்களும், கிருஸ்தவர்களும் ரமலான் இனிப்பு – பதார்த்தங்களை அன்பளிப்பு செய்கின்றனர்.

இது நமது மண்ணின் கலாச்சாரமாகும்.

இதை வலுப்படுத்துவது நமது காலத்தின் கடமையாகும்.

எனவே உங்கள் பகுதியில் / குடியிருப்பு கட்டிடங்களில் / வீதிகளில் வாழும் சகோதர சமுதாய உறவுகளுக்கு – அவர்களின் வீடுகளுக்கு நோன்பு கஞ்சியை அனுப்பி வையுங்கள்.

சைவ உணவு பழக்கமுள்ளவர்களுக்கு அதற்கேற்ப தயாரித்து அனுப்புங்கள்.

அரசியலாளர்கள், சாதி – சமூக ஆளுமைகள், அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் என அனைவருக்கும் இந்த விருந்தோம்பலை செய்ய திட்டமிடுங்கள்.

இதன் மூலம் சகோதரத்துவமும், புரிதலும், பரஸ்பர அன்பும் வளரும்.

இதை மனிதநேய ஜனநாயக கட்சியினர் ரமலானில் அடுத்து வரும் 10 நாட்களில் இதை ஒரு சமூக நல்லிணக்க கடமையாக முன்னெடுக்க வேண்டுகிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி
தலைவர்
மனிதநேய ஜனநாயக கட்சி
29.03.2024.