மழை நீரில் மூழ்கிய பயிர்கள்… ஏக்கருக்கு 25 ஆயிரம் இழப்பீடு தேவை! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேட்டி!

தை பொங்கலுக்கு பிறகு பிப்ரவரி மாத தொடர் கன மழையால் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை தொடர்ந்து இரண்டாவது நாளாக மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பார்வையிட்டு வருகிறார்.

நேற்று நாகை மாவட்டத்தை ஆய்வு செய்து விட்டு, இன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதிக்கு வருகை தந்தவர், கட்டிமேடு, ஆதிங்கம், பாண்டி, பிச்சன்கோட்டகம் பகுதிகளில் மழையில் மூழ்கிய வயல்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது…

பிப்ரவரி மாத திடீர் மழையால் அறுவடைக்கு காத்திருந்த பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் இப்பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சில இடங்களில் கால்வாய்கள் தூர் வாரப்படாததால், மழை நீர் வெளியேற முடியாமல் தேங்கி விட்டது. இதை அதிகாரிகள் இனி கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழக அரசு அறுவடை செய்யாத அனைத்து விவசாயிகளுக்கும் பாராபட்சமின்றி, ஏக்கர் ஒன்றுக்கு தலா 25 ஆயிரமும், காப்பீட்டு நிறுவனங்களிடம் பேசி உரிய முழு இழப்பீடும் வழங்க ஆவணம் செய்ய வேண்டும் .

இவ்வாறு பேட்டியளித்தார்.

மேலும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கும் இதை மஜக எடுத்துச் செல்லும் என்றும் கூறினார்.

நாளை மயிலாடுதுறை மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்யப் போவதாகவும் கூறினார்.

இந்நிகழ்வில் ஆதிரங்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரன், நெல் உற்பத்தியாளர் மற்றும் விவசாய சங்க செயலாளர் செந்தில் குமார், கட்டிமேடு ஊராட்சி மன்ற உறுப்பினர் மதி, மஜக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ரஹ்மத்துல்லா, ஒன்றிய செயலாளர் நிஜாம் மைதீன், மாவட்ட it விங் செயலாளர் முகம்மது ஆசிப், கிளை நிர்வாகிகள் முகம்மது பைசல், ஷேக் அவுலியா, பர்கான், பாசிக் மற்றும் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.