சிரிப்பில் சிந்தனையையும், சிந்தனையில் சிரிப்பையும் முன்னெடுத்தவர் விவேக் ….! மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!


சின்னக் கலைவாணர் என தமிழ் திரையுலகு கொண்டாடிய #நடிகர்_விவேக் அவர்களின் மரணம் எதிர்பாராதது.

எழுத்தாளராக பணிகளை தொடங்கி பின்னர் திரையுலகில் மிளிர்ந்த அவர், தன்னை சமூக சேவையிலும் ஈடுபடுத்திக் கொண்டார்.

கலைவாணருக்கு பிறகு தமிழ் திரையுலகில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக விழிப்புணர்வு கருத்துக்களை முன்னெடுத்தவர் அவர். மெல்லிய அரசியல் கேலியும் அதில் கலந்திருக்கும்.

ஆழ் துளை கிணற்றுக்குள் குழந்தை விழுவதையும், அதன் காரணங்களையும் நகைச்சுவை ததும்ப அவர் எடுத்துக் கூறி ஒரு படத்தில் நடித்தது அதில் ஒன்று. இப்படி பலவற்றை கூறலாம்.

முற்போக்கு கருத்துகளை முன்வைத்ததால் அவருக்கு பெரியார் விருது கிடைத்தது.

சிரிப்பில் சிந்தனையையும், சிந்தனையில் சிரிப்பையும் நிலை நாட்டியவர். அதனால் தான் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் சின்னக் கலைவாணர் என அவருக்கு பட்டமளித்து மகிழ்ந்தார்.

மேதகு முன்னாள் ஜனாதிபதி APJ அப்துல் கலாம் அவர்களின் அறிவுரையை ஏற்று தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கில் மரங்களை நட்ட அவரது சூழலியல் செயல்பாடு அவரது பாராட்டத்தக்க பணிகளில் முதன்மையானதாகும்.

ஆற்றலும், சிறப்பும் கொண்டவர்களை ஊக்குவிக்கும் அவர், அப்படிப்பட்டவர்கள் தலைவர்களாக இருப்பின் அவர்களை சந்தித்து உரையாடுவதிலும் ஆர்வம் காட்டினார்.

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீக் வான் யூ வை புகழ்ந்ததும்,மலேஷியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதுவை அவர் சந்தித்ததும் அவ்வாறுதான்.

கலை, இலக்கியம், சூழலியல் என தொடர்ந்த அவரது பயணம் இவ்வளவு விரைவாக முற்றுப் பெற்றது ஒரு வேதனையான நிகழ்வாகும்.

எல்லோரையும் சிரிக்க வைத்தவர் இன்று எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், திரை உலகத்தினர், ரசிகர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
17.04.2021