ஆளுநர் ரவி அவர்களின் பேச்சு பதட்டத்தை தூண்டக்கூடியது! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை!

இன்று சென்னையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய தமிழக ஆளுநர் திரு.ரவி அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ( PFI )அமைப்பு குறித்து கூறிய குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கிறது.

ஒரு ஆளுநர் இப்படி பேசுவது நியாயமா? என்ற கேள்விகள் எழுகிறது.

இந்நிலையில் ஆளுநர் பொறுப்பில் இருக்கக் கூடியவர், ஒரு அமைப்பின் மீது குற்றம் சாட்டும் போது, அதற்கான ஆதாரத்தை கூறி தனது கருத்தை முன்வைக்க வேண்டும்.

மனம் போன போக்கில் பேசக் கூடாது. அது பதட்டத்தை தூண்டுவதாக அமைந்து விடக் கூடாது.

பொது வெளியில் வீச்சரிவாள், வெட்டுக் கத்தி ஆகியவற்றோடு ஊர்வலம் போகும் அமைப்பினர், சிறுபான்மையினருக்கு எதிராக பகிரங்கமாக துப்பாக்கி பயிற்சி எடுக்கும் பயங்கரவாத அமைப்புகள், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது உள்துறை அமைச்சகத்தால் காவி பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டவர்கள் மீதெல்லாம் இத்தகைய விமர்சனங்களை ஆளுநர் முன்வைப்பாரா? என்ற ஜனநாயக சக்திகளின் கேள்விகளுக்கு பதில் தேவை.

தமிழ் , தமிழர் ,தமிழகம் ஆகிய விவகாரங்களில் எதிர்மனநிலை கொண்டவராக தமிழக ஆளுநர் செயல் பாடுகிறார் என்ற விமர்சனங்கள் பரவலாகி வரும் நிலையில், அவரது இத்தகைய பேச்சுகள் ஏற்கத்தக்கதல்ல.

இதை மனிதநேய ஜனநாயக கட்சி கண்டிக்கிறது.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி,
06.05.2022