பள்ளிவாசல் சமாதான இல்லங்கள்..! பள்ளிவாசல் திறப்பு விழாவில் மஜக பொதுச்செயலாளர் உரை..!!

தஞ்சை.ஏப்.28., தஞ்சாவூரில் நேற்று (27-04-2018) இருபது கண்பாலம் அருகில் #மஸ்ஜிதே_அல்குத்தூஸ் என்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி MLA, தலைமை நிர்வாக குழு உறுப்பினர் J.S ரிபாய் ரஷாதி, தஞ்சை ஆற்றங்கரை பள்ளி தலைமை இமாம் மவ்லவி அப்துர் ரஹ்மான் மண்பஈ, புனித சேவியர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் அருட்திரு, பால்ராஜ், மனிதநேய வணிகர் சங்க மாநில செயலாளர் கலந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் பள்ளிவாசலை திறந்து வைத்து மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA உரையாற்றினார். அதிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு:-

தஞ்சாவூர் என்பது பஞ்சம் தீர்க்கும் ஊராகும். பலர் தஞ்சமடையும் ஊர் என்பதாலேயே இதற்கு தஞ்சாவூர் என பெயர் வந்தது. இங்கு பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள், சென்னை, கோவை போல இங்கும் குடியேறி வருகின்றனர். அதன் விளைவாகவே புதிய குடியேற்றங்களும், புதிய பள்ளிவாசல்களும் உருவாகி வருகின்றன.

இங்கு ஒரு பள்ளிவாசல் திறக்கப்பட்டிருக்கிறது என்றால் சமாதானத்திற்கான வாசல் திறக்கப்பட்டிருப்பதாக புரிந்துக் கொள்ள வேண்டும். பள்ளிவாசல் என்பது கல்வி கூடமாகவும், நீதிமன்றமாகவும், ஆதரவற்றவர்களுக்கான புகலிடமாகவும், உதவும் இல்லமாகவும் தொண்டாற்றக் கூடியதாகும். இங்கு தொழுகை மட்டும் அல்ல. மக்களுக்கான சேவைகளும் நடைபெற வேண்டும்.

சென்னை மாநகரம் வெள்ளத்தில் மிதந்தப்போது, பள்ளிவாசல்கள் அனைத்து மக்களின் புகலிடமாக இயங்கியதை மறந்துவிடக்கூடாது.

இந்த பள்ளிவாசல் இப்பகுதியில் உள்ள அனைத்து மக்களையும் இணைக்கும் மையமாக திகழ செய்யவேண்டும். இங்கு வந்திருக்கும் நீங்கள் அனைவரும், இந்துக்களையும், கிருத்துவர்களையும், தலித்துகளையும் இங்கு அழைத்து வந்து புரிதலை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு இங்கு விருந்தோம்பல் செய்ய வேண்டும்.

இங்குள்ள சகோதர சமூக மக்கள், ஒலிப்பெருக்கியின் சப்த அளவை சற்று குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். அதுதான் சகிப்புதன்மையாகும். ஒலிப்பெருக்கிகளை தேவையில்லாமல் பயன்படுத்தி முதியவர்களும், குழந்தைகளுக்கும் தொந்தரவை கொடுத்துவிடக் கூடாது.

ஒரு முஸ்லிம் பிறருக்கு தொந்தரவு செய்பவனாக இருக்க மாட்டான் என்பதை நடைமுறையில் செயல்படுத்த வேண்டும்.

காரணம் பள்ளிவாசல் என்பது அன்பு,இணக்கம் சமாதானம் ஆகியவற்றுக்கான இடம் என்பதை மறந்து விட கூடாது.

இப்போது நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது நாட்டில் வன்முறைகள் பெருகி வருகிறது, மோடியின் ஆட்சியில் மதவெறியர்கள் வன்முறைகள் மூலம் அதிகாரத்தை தக்க வைக்க நினைக்கிறார்கள்.

நாம் அனைத்து வன்முறைகளையும், பயங்கரவாதங்களையும் எதிர்க்கிறோம், நமது போராட்டங்களில் கூட பேருந்துகளை உடைப்பதில்லை பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவதில்லை. அதையெல்லாம் நாம் ஊக்குவிப்பதில்லை. காரணம் நமக்கென்று வழிமுறைகள் உண்டு. எனவே தான் ஐஎஸ் அமைப்பின் வன்முறைகளையும், பயங்காரவாதங்களையும் கடுமையாக எதிர்க்கிறோம். அமைதியும், ஒற்றுமையுமே நமது இலக்கு.

இந்த பள்ளிவாசலில் அமைதிக்காக பிராத்தியுங்கள், நாட்டு மக்களின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் பிரார்த்தியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார் நிகழ்ச்சியை மஜக மாவட்ட செயலாளர் அஹ்மது தொகுத்து வழங்கினார். மஜக மாவட்ட பொருளாளரும் பள்ளிவாசல் நிர்வாகியுமான ஜப்பார் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார். பெருந்திரளாக மக்கள் தொழுகையில் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தஞ்சை_மாநகர்_மாவட்டம்.