மார்ச்-26 அரசியல் மறுமலர்ச்சி மாநாடு : தலைமையக அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையக அறிவிப்பு :

(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை)

மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியல் மறுமலர்ச்சி மாநாடு இறையருளால் எதிர்வரும் மார்ச் 26 , 2016 சனிக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் சென்னை OMR சாலையில் உள்ள YMCA திடலில் நடைபெறவிருக்கிறது .

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் இம்மாநாட்டில் பங்கேற்கவிருக்கிறார்கள் . ஆயிரக்கணக்கான வாகனங்களை நிறுத்த பல்வேறு கல்லூரிகள் மற்றும் பள்ளிக்கூட மைதானங்கள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன .

இரவு புறப்பட்டு காலை வந்து சேரும் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தங்குவதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன . மாநாட்டு மைதானத்தில் புத்தக கடைகள் , வணிக வளாகங்கள் , உணவகங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன .

மாநாட்டு திடலுக்கு கலீபா உமர் அவர்களின் பெயரும் , மேடைக்கு காயிதே மில்லத் அவர்களின் பெயரும் , பெண்கள் பகுதிக்கு அன்னை . தெரஸா அவர்களின் பெயரும் , இரண்டு நுழைவுவாயில்களுக்கு ஒன்றுக்கு ஐயா பெரியார் அவர்களின் பெயரும் , இன்னொன்றுக்கு மாணவர் போராளி ரோஹித் வெமுலா அவர்களின் பெயரும் ,திடல் வரவேற்பு வளைவுக்கு மவ்லவி அப்துல் ரஹீம் அவர்களின் பெயரும் சூட்டப்பட்டுள்ளது .

இம்மாநாட்டில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகிகள் உரையாற்றுகிறார்கள் . மாவட்ட செயலாளர்கள் , அணிகளின் மாநில செயலாளர்கள் , செயற்குழு உறுப்பினர்கள் தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றுகிறார்கள் .

இம்மாநாட்டில் அ.இ.அ.தி.மு.க வின் சார்பில் அனைத்துலக MGR நற்பணி மன்ற செயலாளரும் , தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான தமிழ்மகன் உசேன் , இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் , சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் R. சரத்குமார் , பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் P.V.கதிரவன் , தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி. வேல் முருகன் , கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனர் U. தனியரசு , இந்திய யூனியன் காயிதேமில்லத் லீக்கின் தலைவர் தாவூத் மியாகான் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர் .

இவண்

M.தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
24-03-2016