உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்..!

image

(மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை…)

இந்திய நீதித்துறையின் உச்சபட்ச தலைமை பீடத்தில் இருக்கும் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா அவர்களுக்கு எதிராக மூத்த அமர்வு நீதிபதிகள் செல்ல மேஷ்வர், ஜோசப் குரியன், ரஞ்சன் கோஜாய் மற்றும் மதன் பி.லோகூர் ஆகிய நால்வரும் கிளார்ந்தெழுந்து நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து தங்கள் உள்ளக் குமுறல்களை கொட்டித் தீர்த்திருக்கிறார்கள்.

இது நீதித்துறை வரலாற்றில் இதுவரை நடந்திராத நிகழ்வு.
ஒட்டுமொத்த நீதித்துறையையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் நடவடிக்கைகள் நீண்ட காலமாக ஜனநாயக விரோதமாக நடந்து வருவதை இந்த நால்வரின் பேச்சுக்கள் அம்பலப் படுத்திவுள்ளது.

உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதுவரை எந்த ஒரு தலைமை நீதிபதியும், தங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள நீதிபதிகளால் இந்த அளவுக்கு விமர்சிக்கப்பட்டதில்லை. குற்றம் சுமத்தப்பட்டதும் இல்லை.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் நடவடிக்கைகள் செயல்பாடுகள் எப்போது மக்கள் மன்றத்தின் முடிவுக்காக விடப்பட்டு விட்டதோ அப்போதே தலைமை நீதிபதி தனது நம்பிக்கையை இழந்துவிட்டார். விளிம்பு நிலையில் உள்ள சாதாரண குடிமகன்கூட நீதிக்கான கடைசிப் புகழிடமாக நீதித்துறையையே நம்பி இருக்கிறான்.

இந்த நிலையில் நீதித்துறையின் உச்சபட்ச ஆதிகாரபீடமே கேள்விக்குறியாகி விட்ட நிலையில் தீபக்மிஸ்ரா அவர்கள் தனது பதவியில் நீடிப்பதற்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என்பதை உணர்ந்து உடனடியாக அவர் பதவிவிலக வேண்டும்.அவர் பதவி விலகாவிட்டால் அவருக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் உள்ள மறைமுக நெருக்கம் அம்பலமாகிப் போகும் என்பதையும் அவர் உணர வேண்டும்.

மேலும் இவர் தலைமையில் அளிக்கப்பட்ட அனைத்து தீர்ப்புகளையும் மறு பரிசீலனை செய்யவேண்டும்.

இவண்;
M. தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
14.01.2018