பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்! மஜக கோரிக்கை!

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் அறிக்கை)

முன்னாள் பிரதமர் திரு.ராஜிவ் காந்தி அவர்களின் படுகொலை வழக்கில் 27 ஆண்டு காலமாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது.

இதை தமிழக அரசு காலதாமாதயின்றி உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்கள் அனைத்து கட்சியினரின் ஆதரவோடு இவர்களின் விடுதலையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதை நினைவு கூர்கிறோம்.

மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்களிடம் நானும், தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு அவர்களும், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அவர்களும் இதே கோரிக்கையை பல முறை வலியுறுத்தி இருக்கிறோம்.

அதன் விளைவாகவே பேரறிவாளனுக்கு தமிழக அரசு பரோல் வழங்கியதை நன்றியுடன் நினைத்து பார்க்கிறோம்.

எனவே இவர்களின் விடுதலையை விரைவுப் படுத்துமாறு மாண்புமிகு தமிழக முதல்வரை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இதன் மூலம் வரலாறு, முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களை புகழின் உச்சிக்கு எடுத்து செல்லும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

ஏற்கனவே 7 பேரையும் சோனியா காந்தியின் குடும்பம் மனதார மன்னித்துவிட்ட பிறகு ,வேறு யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை.

எனவே மத்திய அரசு இவ்விசயத்தில் மனிதாபிமானத்தோடு துணைநிற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவண்;
#மு_தமிமுன்_அன்சாரி_MLA பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி,
06/09/2018.